ADDED : ஜூலை 20, 2025 10:34 PM
எல்லா துறையிலும் 'பொறுப்பு'பணிகள் எல்லாம் முடங்கியிருக்கு!
வால்பாறையில், டீக்கடையில் இருந்த இருவர், நம்ம ஊருக்கு வந்த சோதனைய பாருங்க, எல்லா துறையிலும் பொறுப்பு அதிகாரிகள் இருக்கறாங்க,' என, பேசிக்கொண்டிருந்தனர். அவங்க பேசியதில் இருந்து...
வால்பாறையில இருக்கற பெரும்பாலான அரசு துறைகளில், நிரந்தர அதிகாரிகள் யாரும் இல்ல. எல்லா துறையிலும், பொறுப்பு அதிகாரிக தான் இருக்காங்க. என்ன நடந்துச்சு, ஏது நடந்துச்சுனு தெரியல. வால்பாறைக்குனா அதிகாரிக தலைதெறிக்க ஓடுறாங்களாம்.
குறிப்பா, கல்வித்துறையில வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர், நகராட்சி கமிஷனர், அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என, எல்லா அரசு துறையிலும் நிரந்தரமாக அதிகாரிகள நியமிக்கல. எல்லா இடத்திலும் பொறுப்பு அதிகாரிக தான் இருக்காங்க. ஊழியர்களை கூட கண்காணிக்க ஆளில்ல.
நகராட்சியில கமிஷனர் பணியிடம் காலியா இருக்கறதால, வார்டுல எந்த வளர்ச்சிப்பணியும் நடப்பதில்ல. சட்டசபை தேர்தல் நெருங்கற நேரத்துல, அரசு துறையில உயர் பதவி காலியா இருக்கறதால, பணிகள் அனைத்தும் முடங்கி போயிருக்கு. கடிவாளம் இல்லாம, அரசு துறைகள் செயல்படுதுனு, பேசிக்கிட்டாங்க.
அதிகாரிக கண்டுகொள்ளாததாலரோடெல்லாம் பறக்குது மஞ்சி
திருப்பூர் போகற வழியில, வசவநாயக்கன்பட்டி பிரிவில், கொளுத்தும் வெயிலுக்கு மரத்தடி நிழலில் ஒதுங்கினோம். அங்கு, முதியவர்கள் சுவாரசியமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் பேசியதில் இருந்து...
திருப்பூர் மெயின் ரோட்டிலிருந்து நம்மூருக்கு போக வெகு சிரமப்பட வேண்டியிருக்கு என ஒருவர் பேச்சை ஆரம்பித்தார். அதற்கு மற்றொருவர், ஏம்பா வெயிலை சொல்றீயா என கேட்க.
அட அதில்லைப்பா... 'ஆடிக்காத்து ஆரம்பிச்சிருச்சு, நம்ம ரோட்டுல ஏற்கனவே, மட்டை மில்ல இருந்து மஞ்சி துாள் காத்துல பறக்கும். இப்ப அடிக்கற காத்துக்கு, தலை, கண்ணு எல்லாம் மஞ்சி நிரம்பிடுது. மஞ்சி துாள்ல இருந்து தப்பிக்கிறது சிரமம். கண்ணுக்குள்ள அந்த துாள் விழுந்தா, பல்வேறு பாதிப்பு ஏற்படுது.
நடந்து போறவங்களுக்கே இந்த நிலைமை. பைக்ல போகறவங்க ெஹல்மெட் இல்லாட்டி, கண் கண்ணாடி போடலைனா, மஞ்சி துாள் கண்ணுல விழுந்து, கீழே விழுந்து காயமடையறாங்க.
தோட்டத்து வீட்டுல வசிக்கிறவங்க நிலைமை அதவிட மோசம். எல்லா இடத்திலும், மஞ்சி துாள் விழுந்து கிடப்பதால, ஆடு, மாடுக கூட பாதிக்கப்படுது. ரொம்ப நாளா இந்த பிரச்னை இருக்குது.
இத பத்தி, எல்லா துறை ஆபிசர் கிட்டயும் புகார் தெரிவிச்சும், மில்லுக்காரங்க ஆளுங்கட்சிங்கறதால எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டீங்கறாங்க. ரூல்ஸ் எல்லாம் சாமனிய மக்களுக்கு மட்டும்தான்னு சொல்லிட்டு, தலைக்கு துண்டு போட்டுட்டு அப்படியே நடந்து போனாங்க.
உயரதிகாரி வந்தா சுத்தமாகுதுஅதிகாரி கவனிச்சா நல்லாயிருக்கும்
கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் வழியாக, நண்பருடன் சென்றேன். அப்போது, போலீஸ் ஸ்டேஷன் முன்பாக, கார்டன் பகுதியில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தது. திடீரென சுத்தம் பண்ணுறீங்கனு போலீசாரிடம் கேட்டேன்.
அதற்கு, டி.ஐ.ஜி., இந்த வழியா போறாருங்க. ஒரு வேளை திடீர்னு இந்த ஸ்டேஷனுக்கு ஆய்வுக்கு வந்துட்டா என்ன பண்றது. அதனாலதான் ஆட்கள வைத்து அவசர அவசரமா சுத்தம் பண்ணுறோம்னு, போலீசார் சொன்னாங்க.
ரெண்டு நாளைக்கு முன்னாடி வரைக்கும், இந்த இடமே முழுக்க பிளாஸ்டிக் பாட்டிலும், குப்பையுமா இருந்தது. இப்போ டி.ஐ.ஜி., வர்றாருனு சுத்தம் செய்யறாங்க. உயர் அதிகாரிக்கு பயந்துட்டு, சுத்தப்படுத்தற வேலை வேகமா நடக்குது.
இதே மாதிரி ஒவ்வொரு துறை உயர் அதிகாரிகளும், நம்ம ஊரு பக்கம் வந்தா தான், ஊரு சுத்தமாகும் போலிருக்கு. உள்ளூர் அதிகாரிகள் குப்பை அகற்றும் சுகாதார பணியில் தினமும் ஈடுபட்டால், எல்லா இடமும் சுத்தமா இருக்குமே. இதெல்லாம், அனைத்து துறை உள்ளூர் அதிகாரிகளுக்கும் புரிஞ்சுக்கணும்னு நண்பர் ஆதங்கத்தை கொட்டினார்.
வழக்கம் போல அமைச்சர் உறுதிநல்லது நடக்கும்னு காத்திருக்காங்க
பொள்ளாச்சியில, பி.ஏ.பி., திட்டம் உருவாக காரணமாக இருந்தோருக்கு உருவச்சிலை, அவங்க பேருல பயிற்சி மையம், அரங்கம் அமைக்கும் பணிய அமைச்சர் வேலு ஆய்வு செய்ய வந்தாரு. அப்ப, அமைச்சரு கிட்ட, 'தினக்கூலி பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கணும்னு,' மனு கொடுத்தாங்க.
அதுக்கு அமைச்சர், 'முதல்வரின் கவனத்துக்கு இந்த பிரச்னைய கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன்,' என, வழக்கம் போல ரெடிமேடு பதிலை சொன்னாரு.
அங்கிருந்த, தற்காலிக பணியாளர்களிடம் விசாரிச்சப்ப, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் பணி நிரந்தரம் பண்ணல. இதுல ஒரு சிலர் 'ரிட்டயர்டு' ஆயிட்டாங்க. சிலர் வயதாகி இறந்துட்டாங்க. அவங்க குடும்பத்துக்கு எந்த பலனும் கிடைக்காது.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில, தற்காலிக பணியாளர்கள் எல்லோரும் பணி நிரந்தரம் செய்யப்படுவாங்கனு வாக்குறுதி கொடுத்திருக்காங்க. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாச்சு. ஆட்சி முடிவதற்குள்ளாவது எங்கள நிரந்தரமாக்கினால் நல்லா இருக்கும். நல்லது நடக்கும்னு நம்பியிருக்கோம்னு சொன்னாங்க.

