தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்

ரிப்போர்ட்டர் லீக்ஸ்


ADDED : செப் 07, 2025 09:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2025 09:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வளர்ச்சி பணியில் அக்கறையில்லை

கவுன்சிலர்கள் மீது மக்கள் அதிருப்தி வால்பாறை நகராட்சியில நடக்கற கூத்த பாத்தா வரும் சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு கேட்டு கவுன்சிலர்கள் வார்டு பக்கமே போக முடியாது போலிருக்கு, என, பஸ் ஸ்டாண்டில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்களது பேச்சை கவனித்தேன்.

வால்பாறை நகராட்சியில உள்ள 21 வார்டுகள்ல, 19 வார்டு தி.மு.க.,வசம் இருக்கு. அ.தி.மு.க., வி.சி., வசம் தலா ஒரு வார்டு இருக்கு. கடந்த உள்ளாட்சி தேர்தல்ல தி.மு.க.வினர் வழங்கிய பணம் மற்றும் கொலுசுக்கு வெற்றி கிடைச்சுது.

ஆனா, வெற்றி பெற்ற பின் வார்டு மக்கள் பிரச்னைகள யாரும் கண்டுக்கறதில்ல. குறிப்பாக, வார்டுகள்ல தெருவிளக்குகள் கூட சரிவர எரிவதில்லை. வார்டில் ஏகப்பட்ட பிரச்னை இருக்கும் போது, நகராட்சி தலைவர் - கவுன்சிலர்களுக்கு இடையே உச்சகட்ட மோதல் ஏற்பட்டிருக்கு. ஐந்து முறை மன்றக்கூட்டமும் நடக்கல. இதனால, வார்டுகள்ல கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக எந்த ஒரு வளர்ச்சி பணியும் நடக்கல.

இதனால, நகராட்சி கவுன்சிலர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில இருக்காங்க. கவுன்சிலர்க வார்டுக்குள்ள தலைகாட்ட முடியாமல் பரிதவிக்கிறாங்க. கட்சி மேலிடமும் இதை கண்டுக்கமாட்டேங்குது. வரும் சட்டசபை தேர்தல்ல கவுன்சிலர்கள் வார்டு பக்கமே தலைகாட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. அதே நேரம் தி.மு.க., கவுன்சிலர்களின் இந்த நடவடிக்கையால், அ.தி.மு.க.,வினர் குஷியாயிருக்காங்கனு, பேசிக்கிட்டாங்க.

தலைவர் சிலைகளுக்கு முகமூடி; ஆளுங்கட்சியினர் புலம்பல்

உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். புது பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகள் குறித்து விவாதித்து கொண்டிருப்பார்கள் என நினைத்தால், சொந்த கட்சி பிரச்னைய புலம்பிட்டிருந்தாங்க. அவர்கள் பேசியதில் இருந்து...

நம்மூருல முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சி பல இழுபறிக்கு அப்புறம் நடந்துச்சு. அப்பவும், கட்சிக்காரங்க நினைச்ச எதுவும் நடக்கல. குறிப்பா, பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, மேடை கட்டி, தலைவருங்க சிலை எல்லாம் வைச்சாங்க. கிருஷ்ணாபுரத்திலயும், அவசர அவசரமாக, முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைச்சு முதல்வர் கையால திறக்க திட்டமிட்டிருந்தாங்க. எந்த தலைவர் சிலையையும் முதல்வர் திறக்கல.

சிலை வைக்க நெடுஞ்சாலைத்துறையில அனுமதி வாங்கல, அப்படி, இப்படின்னு பேசிக்கறாங்க. ஆனா, இதுக்கு பின்னாடி பெரிய அரசியல் இருக்குனு பேசிக்கறாங்க.

அது ஏதுவாக இருந்தாலும் பரவாயில்லை. தலைவருங்க சிலை எல்லாத்துயும், முக்கியமான இடத்துல, ரொம்ப நாளா, முகமூடி போட்டு மூடி வைச்சு இருக்காங்க. அதைதான் தாங்க முடியல. நம்ம ஆட்சி நடக்கறப்ப, தலைவருக்கு சிலை கூட திறக்க முடியலைனு எதிர்க்கட்சிக்காரங்க விமர்சனம் பண்ணுறாங்க. கட்சிக்குள்ள நடக்கற பிரச்னைய மறந்துட்டு சீக்கிரமா சிலைய திறந்தா பரவாயில்லைனு பேசிக்கிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றனர்.

பகலிலும் பறக்குது கிராவல் மண்; போராட தயாராகும் விவசாயிகள்

உடுமலை தாலுகா அலுவலகம் பக்கத்துல விவசாயிகள் சிலர், இவங்க இப்படியே விட்டா, மண்ணை கடத்தி, மலையை கரைச்சிடுவாங்கனு பேசிக்கிட்டிருந்தாங்க. என்ன விஷயம்னு விசாரிச்சேன்.

உடுமலை தாலுகாவில் பல இடத்துல, கிராவல் மண் கடத்தல் தொடர்ந்து நடக்குது. தனியார் விளைநிலங்கள், மலையடிவாரத்தில் உள்ள நீர்நிலைகள் இருந்தும், ராத்திரி நேரத்துல கிராவல் மண்ணை அள்ளி, கேரளாவுக்கு விற்பனை பண்ணுறாங்க.

தகவல் தெரிந்தாலும், வருவாய்த்துறையினர் கண்டுக்காம கமுக்கமா இருக்கறாங்க. வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிக, வாகன சோதனை செய்து, கூடுதல் லோடு என்ற பெயரில் அபராதம் விதிச்சுட்டு இருந்தாங்க. இப்ப, அத்துறையினரும் வெளியில் தலைகாட்டுவதில்லை. இதனால, ராத்திரி நேரம் மட்டுமில்லாம பகலிலும் கிராவல் மண்ணை லோடு லோடா கடத்த துவக்கிட்டாங்க. மெயின்ரோட்டுல போகாம, கிராம இணைப்பு ரோடுகள் வழியா ஈஸியா மண்ணை கடத்திட்டு போறாங்க. சமூக ஆர்வலர்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தாலும், அந்தந்த ஏரியா ஆளுங்கட்சி பிரமுகர்கள் பிரஷர் கொடுத்து, வாகனங்களை விடுவிக்க சொல்லறாங்கலாம். அதிகாரிகளும் வேற வழியில்லாமல் அந்த வாகனங்கள விட்டுடுறாங்க.

இதனால, மண் கடத்தல் தாறுமாறா நடக்குது. இதுவரை அமைதியாக இருந்த விவசாய சங்கத்தினர் சிலர், கடத்தல் லாரிகளை சிறைப்பிடிக்கவும், ஆதாரங்களுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் தயாராயிட்டு இருக்காங்க.

கோவில் திருப்பணி எப்ப முடியும்; நாலு வருசமா நடக்குது இழுபறி

நெகமம் பஸ் ஸ்டாண்டுக்கு நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு, நண்பர் குருநல்லிபாளையம் கோவில் பிரச்னை பத்தி தெரியுமானு பேச ஆரம்பிச்சார்.

குருநல்லிபாளையத்தில இருக்குற மாரியம்மன் கோவில் ஹிந்து அறநிலையத்துறை கன்ட்ரோல்ல வருது. இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யறதா சொல்லி, அதே ஊரைச் சேர்ந்த மக்கள் கொஞ்ச பேர் முறையா பர்மிஷன் கேட்காம மதில் சுவற்றை இடிச்சு, கோவில் வேலையை ஆரம்பிச்சாங்க. ஆனா, நாலு வருசம் ஆகியும் இப்போ வரைக்கும் கோவில் திருப்பணி வேலைகள் முடியல.

இது சம்பந்தமா, அப்போ அறநிலை துறை அதிகாரியா இருந்த ஒரு பெண் அதிகாரியிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கல. கடைசியில இந்த பிரச்னைய சி.எம்., செல்லுக்கு அதே ஊரைச் சேர்ந்த ஒருவர் பெட்டிசன் அனுப்பியிருக்காரு.

இத பத்தி இப்போ இருக்குற அதிகாரிங்க கிட்ட கேட்டா, கோவில் வேலை நடந்துட்டு இருக்குது. இந்த கோவிலுக்குனு 25 ஏக்கர் நிலம் இருக்கு. இந்த நிலம் பல ஆண்டுகளாக கோவில் பூஜை செய்யும் நபர்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்குது. இதுல வரும் வருமானத்துல ஒரு பகுதியை அவங்களும் கொடுத்தா வேலையை இன்னும் சீக்கிரமா முடிச்சிடலாமுனு சொல்றாங்க. எப்படியோ ஒரு வழியா கோவில் வேலை முடிஞ்சு கும்பாபிஷேகம் நடந்தா, அம்மன் மனசு குளிர்ந்திடுமுனு சொல்லிட்டு கிளம்பிட்டார்.

இளசுகள் அசுர வேகம்; 'கடிவாளம்' போட்டா நல்லாயிருக்கும்!


பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது, நண்பர், 'இளங்கன்று பயமறியாது என சொல்லுறது உண்மை தான்,' என பேச துவங்கினார். அவர் சொன்னதில் இருந்து... நம்ம ஊருல லைசென்ஸ் இல்லாமலேயே பசங்க நிறைய பேரு டூவீலர்ல பறக்குறாங்க. ரோட்டுல போகற யாரையும் கண்டுக்காம அதிக திறன் கொண்ட பைக்குல போட்டி போட்டு ஓட்டிட்டு போகறாங்க. இவங்க ஹாரன் அடிச்சுகிட்டே வேகமாக போகறத பார்த்தா, ரோட்டுல வாகனங்களில் போகறவங்களுக்கு பதட்டம் ஏற்படுது.
பல பசங்க ஸ்கூல்லுக்கே டூவீலர்ல போனாலும், ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற இடத்துல நிறுத்தி வைச்சுட்டு போகறாங்க. இதுக்கு எப்படி பெற்றோர் சம்மதிக்கறாங்கனு தெரியல. அவங்களால மற்றவர்களுக்கு அச்சம் தான் ஏற்படுது. படிக்கற பசங்களுக்கு விபத்து ஏற்பட்டா என்னாவது, பாதுகாப்பு முக்கியம்னு சொன்னாலும் அவங்க கண்டுக்கற மாதிரி தெரியல. அதுவும் நம்ம ஊரு ரோடு எல்லாம் குண்டும், குழியுமாக இருந்தாலும், அசுர வேகத்துல பறக்கறாங்க.
கீழே விழுந்தா என்னாகும்னு உணரமாட்டேங்கறாங்க. இது குறித்து போலீஸ், வட்டார போக்குவரத்து அதிகாரிக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கணும். வாகனங்கள பறிமுதல் செய்து, பெற்றோரை வரவழைத்து அவங்க மேலயும் நடவடிக்கை எடுக்கணும். அப்ப தான், அவங்களுக்கும் பயம் இருங்கும்னு, சொல்லி முடித்தார். அவர் சொல்லி முடித்த போதே, கோட்டூர் ரோடு பாலத்துல, இரு சிறுவர்கள், ஆட்டோ ஓட்டியபடி வேகமா போனாங்க.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us