ADDED : பிப் 23, 2026 06:18 AM
பேனர் வைக்கறதுல பஞ்சாயத்து அ.தி.மு.க.,வுக்குள்ள 'டிஸ்யூம்' பெதப்பம்பட்டியில் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வந்த அ.தி.மு.க.,வினர் வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல், அங்கிருந்த நிழலில் ஒதுங்கி மும்முரமாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களது உரையாடலில் இருந்து...
தி.மு.க.,வில் தான், கோஷ்டி மோதலுக்காக சொந்த கட்சிக்காரங்க பேனரையே கிழிப்பாங்க. இந்த நடைமுறையை அ.தி.மு.க.,விலும் ஆரம்பிச்சுட்டாங்க. கட்சி தேர்தல் அறிக்கை வெளியானதும், உடுமலை எம்.எல்.ஏ., உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், தொகுதி முழுக்க பேனர்கள் வைச்சாங்க.
அதுல, கட்சி தேர்தல் அறிக்கை அறிவிப்புகளும், அந்த ஏரியா முக்கிய புள்ளி போட்டோ மட்டும்தான் இருந்துச்சு. இந்த சீசன்ல, கட்சிக்காரங்க சிலர், வழக்கம் போல, பெதப்பம்பட்டி உட்பட பல பகுதியில, பேனர் வைச்சிருக்காங்க. இதனால், கொதிப்படைந்த ஒரு குரூப், எம்.எல்.ஏ., பேனர் மட்டும்தான் இந்த சீசனில் வைக்கணும். வேற ஆளுங்க வைச்சா நடவடிக்கை எடுப்போம்னு பிரச்னை பண்ணி இருக்காங்க.
இதுல அதிருப்தியடைந்த கட்சிக்காரங்க,இப்பிரச்னையை தலைமை வரைக்கும் கொண்டு போயிருக்காங்க. யாரா இருந்தாலும் கட்சிக்கு தானே பேனர் வைக்கிறோம். இதுல பாகுபாடு பார்க்க கூடாது. தொகுதிக்கு கட்சி தலைமை வேட்பாளர் அறிவிக்கிற வரைக்கும், கட்சிக்காரங்க யார் வேண்டுமானாலும் பேனர் வைக்கலாம்.
அதை விட்டுட்டு பிரச்னை பண்ணினா நாங்களும், திருப்பி அடிப்போம்னு உறுதியா சொல்லியிருக்காங்க. அதுக்கு அப்புறம் அவங்க பேனரை 'டச்' பண்ணாம விட்டுட்டாங்க. சரி ஆர்ப்பாட்டத்துல கோஷம் போடறாங்க நாமளும் போவோம்னு அங்கிருந்து கிளம்பினாங்க.
தேர்தல் பணியில் அ.தி.மு.க., குஷி திக்குத்தெரியாமல் தி.மு.க., திணறல் வால்பாறை சட்டசபை தேர்தல் நடக்கறதுக்கு முன்னாடியே அ.தி.மு.க.,காரங்க ரொம்வே சுறுசுறுப்பா இருக்காங்க என,டீ கடையில் இருவர் பேசிக்கொண்டனர். அவர்களது பேச்சை கவனித்தேன்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிப்பு இன்னும் வெளியாகல, வால்பாறை தொகுதியில யாரு போட்டியிட போறாங்கனு தெரியல. ஆனா, வால்பாறையிலஅ.தி.மு.க.,காரங்க வீடுவீடாக சென்று, மக்களுக்கு பரிசு பொருட்கள் கொடுக்கறாங்க.
தேர்தல் பணியில சுணக்கம் காட்டக்கூடாது, அதிக ஓட்டுக்களை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாஜி அமைச்சர் கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்காரு. அதோடு பரிசு பொருட்களும் அனுப்பியிருக்காரு. அதனால, வால்பாறையில இந்த முறை சட்டசபை தேர்தல்ல ஓட்டுக்கள சிந்தாம சிதறாம வாங்கனும்னு முடிவு பண்ணியிருக்காங்க. அதுக்கேற்ப கட்சிக்காரங்களும் பணிய துரிதப்படுத்தியிருக்காங்க.
வால்பாறை நகரத்த கிழக்கு, மேற்கு என இரண்டாக பிரித்து, பொறுப்பாளர்கள நியமிச்சு சுழன்றடிக்கறாங்க. தேர்தல் தேதி அறிவிக்கல, வேட்பாளர் யாருனு தெரியல, இப்பவே அ.தி.மு.க.,காரங்க தேர்தல் பணிய துவங்கிட்டாங்க.
ஆனா, தி.மு.க.,காரங்க, வால்பாறை தொகுதியில இந்த தடவ தி.மு.க., போட்டியிடுமா, கூட்டணிக்கு தாரைவார்க்குமானு தெரியல. வாய்ப்புள்ளவங்க சம்பாதிக்கறாங்க. மக்களுக்கு பரிசு கொடுக்க செலவு பண்ண மாட்டீங்கறாங்க. இப்படி இருந்தா எப்படி வேலை செய்யறதுனு புலம்பறாங்கனு பேசிக்கிட்டாங்க.
அன்அப்ரூவ்டு சைட் விற்கணுமா நெகமம் ரிஜிஸ்டர் ஆபீசை அணுகவும் நெகமத்தில், நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். அங்கு வந்த நண்பர், நெகமம் பக்கத்துல டி.டி.சி.பி. அப்ரூவல் இல்லாத சைட் ஒன்னு இருக்குது, அதை எப்படியாவது சேல் பண்ணனும். இடத்த வாங்க ஆள் ரெடியா இருக்குது. ஆனா, 2016க்கு அப்புறம் இருக்குற சைட்டா இருக்கிறதால பத்திரப்பதிவு பண்றது கஷ்டமா இருக்குதுனு புலம்பினார்.
அதுக்கு மற்றொரு நண்பர், 'கவலைய விடுங்க, நெகமம் சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ்ல, பணம் அதிகமா கொடுத்தா, அன்அப்ரூவ்டு சைட்ட கிரையம் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம். இதுவரைக்கும் பல சைட்டுகள் ரிஜிஸ்ட்ரேஷன் ஆயிருக்கு. அதே மாதிரி நீங்களும் பண்ணிருங்க வேண்டியது தானே,' என்றார்.
இதெல்லாம் தப்பு தானே, நாம முறைப்படி ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணிட்டா, நமக்கு எந்த பாதிப்பும் வராது. அதனால தான் யோசிச்சேன். தமிழ்நாட்டுல நீங்க எந்த ரிஜிஸ்டர் ஆபீஸ் போனாலும், இந்த மாதிரி சைட்ட விற்க முடியாது. ஆனா, நெகமம் சப்-ரிஜிஸ்டர் ஆபீஸ்ல முக்கிய அதிகாரி சப்போர்ட் இருந்தா கிரையம் பண்ணாலாம்.
இப்படி ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி சம்பாதிக்கறதுல மேலிடம் வரைக்கும் கவனிப்பு போகுதாம். அதனால தான், எவ்வளவோ புகார் கிளம்பியும், பல வருஷமா அந்த ஆபீசரே இருக்காருனு, விபரமா சொன்னாரு.
அலட்சியத்தால நடந்திருக்கு தவறு சரி செய்ய அலைக்கழிக்கறாங்க அதிகாரிக ஆனைமலையில் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். புது ரேஷன் கார்டு வாங்கறதுக்கு பேர நீக்கி கொடுங்கனு விண்ணப்பிச்சா, இறந்து விட்டதாக கூறி பேர நீக்கிட்டாங்க. இந்த கொடுமைய எங்க போய் சொல்லறதுனு பேச ஆரம்பித்தார். என்ன விஷயம்னு விசாரிச்சேன்.
ஆனைமலை தாலுகாவுல, பெரியபோது கிராமத்த சேர்ந்த பெண் ஒருவர், திருமணமானதால், புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, பெற்றோர் ரேஷன் கார்டுல இருக்கற தன்னோட பேர நீக்கி கொடுக்க விண்ணப்பித்தார். ஆனால், திருமணமானதால் பேர நீக்கம் செய்வதற்கு பதிலாக, உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்களாக கருதி பேர நீக்கம் செஞ்சுட்டாங்க.
இத சரி செய்து கொடுங்கனு அந்த பெண் விண்ணப்பித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலைக்கழிச்சுட்டு இருக்காங்க. அதிகாரி களோட அலட்சிய போக்கால, இதுபோன்ற தவறு நடந்திருக்குனு, அந்த குடும்பத்தினர் அதிருப்தியில இருக்காங்க.
இப்ப அந்த பெண் புது ரேஷன் கார்டுக்கும் விண்ணப்பிக்க முடியல, இறந்துட்டதா பேர நீக்கம் செய்ததால் ரேஷன் கார்டுக்கு கிடைக்கும் பொருட்களும் கிடைக்கறதில்ல. இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்கணும்னு ஹிந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில், போராட்டம் நடத்த போறாங்க. அதிகாரிகளோட அலட்சியத்தால இந்த மாதிரி எத்தனை தப்பு நடந்திருக்குனு தெரியலைனு ஆதங்கத்தோட சொன்னார்.

