/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுமைய போட்டிக்கான தொகை; முன்கூட்டி விடுவிக்க கோரிக்கை
/
குறுமைய போட்டிக்கான தொகை; முன்கூட்டி விடுவிக்க கோரிக்கை
குறுமைய போட்டிக்கான தொகை; முன்கூட்டி விடுவிக்க கோரிக்கை
குறுமைய போட்டிக்கான தொகை; முன்கூட்டி விடுவிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 17, 2025 08:40 PM
பொள்ளாச்சி; அரசு பள்ளிகள் வாயிலாக, குறுமைய போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக, அதற்கான தொகையை ஒரு மாதத்திற்கு முன்னரே விடுவிக்க வேண்டும், என, கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளி கல்வித்துறை வாயிலாக, ஆண்டுதோறும், குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. குறுமைய போட்டியை தொடர்ந்து, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்படுகிறது.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தடகளம், குழு மற்றும் தனிநபர் என, 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் போட்டிகளில், அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
குறு மைய போட்டி நடத்துவதற்கு, ஏதேனும் ஒரு பள்ளியைத் தேர்வு செய்து, 92 ஆயிரம் முதல் 98 ஆயிரம் ரூபாய் வரை, நிதி விடுவிக்கப்படுகிறது.
இத்தொகை கல்வியாண்டின் இறுதியில் வழங்கப்படுவதால், அரசு பள்ளி வாயிலாக போட்டி நடத்த முடிவதில்லை. தனியார் பள்ளி நிர்வாகத்தினரே போட்டியை நடத்துகின்றனர்.
நடப்பு கல்வியாண்டு, போட்டி நடத்துவதற்கான தொகையை முன்கூட்டியே விடுவித்தால், அரசு பள்ளி வாயிலாக போட்டியை நடத்த முடியும் என, அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிக்கல்வித்துறை வாயிலாக போட்டி நடத்தப்பட்டால், அதற்கான தொகை முன் கூட்டியே விடுவிப்பதில்லை. இதன் காரணமாகவே, குறு மைய போட்டிகளை நடத்த அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.
சொந்த செலவில் போட்டியை நடத்தி, பின்னாளில் தொகையை பெற வேண்டுமே என்ற எண்ணத்தில், போட்டி நடத்துவதை தவிர்த்து விடுகின்றனர். எனவே, போட்டி நடத்துவதற்கான தொகையை, முன் கூட்டியே வழங்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.