/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷன் சீரமைக்க கோரிக்கை
/
போலீஸ் ஸ்டேஷன் சீரமைக்க கோரிக்கை
ADDED : ஆக 20, 2025 10:04 PM

தொண்டாமுத்துார்; கோவையில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும், இன்றளவும் முறையாக பராமரிக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.
தொண்டாமுத்துாரில் உள்ள பழைய போலீஸ் ஸ்டேஷன், 1914ம் ஆண்டு, ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. நுாற்றாண்டை கடந்து இக்கட்டடம் செயல்பட்டு வந்த நிலையில், 2015ம் ஆண்டு, இதனருகே புதிய கட்டடம் கட்டப்பட்டு, அதில், ஸ்டேஷன் நடத்தப்படுகிறது.
நுாற்றாண்டை கடந்து நிற்கும் இந்த பழைய போலீஸ் ஸ்டேஷன் கட்டடம், இன்றளவும், அதன் உறுதித்தன்மையில் குறைபாடு இல்லாமல் உள்ளது.
பயன்பாட்டில் இல்லாததால், பாழடைந்து வீணாகி வருகிறது. நுாற்றாண்டு பழமை வாய்ந்தது என்பதால், இந்த போலீஸ் ஸ்டேஷனில் இருந்த ஒரு சிறையின் கதவு மற்றும் ஜன்னல், சென்னையில் உள்ள போலீஸ் அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்படுகிறது.
பழமைவாய்ந்த இக்கட்டடத்தை வீணாக்காமல் சீரமைத்து, பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனாகவும் அல்லது காவலர்கள் ஓய்வு விடுதியாகவும் மாற்றலாம் என போலீசார் கூறினர்.

