தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
தகவல் அறியும் உரிமை சட்டம்... எதற்காக?:கேட்கும் விவரம் தராமல் மழுப்பல்
ADDED : ஏப் 27, 2026 03:19 AM

கோவை:தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்விகள் கேட்கப்பட்டால், அதிகாரிகள் மழுப்பலான பதில் அளிப்பதாகவும், தொழில்நுட்ப காரணங்களை கூறி விண்ணப்பங்களை நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவல் உரிமை சட்டம் வாயிலாக, சாதாரண குடிமக்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களுக்கு தேவையான தகவல் பெற வழிவகை செய்தது. குடிமக்களுக்கு இச்சட்டம் அதிகாரம் அளித்தது.
இச்சட்டத்தின் தற்போதைய நிலை கவலை அளிப்பதாக உள்ளது. பல நேரங்களில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் மழுப்பலான பதில் அளிப்பது, தொழில் நுட்ப காரணங்களை கூறி விண்ணப்பங்களை நிராகரிப்பது, எந்திரத்தனமாக விண்ணப்பங்களை மற்ற அலுவலகங்களுக்கு மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
வெளிப்படை தன்மையுடன் தகவல்களை தருவதற்கு பதிலாக, தகவல் தருவதை தவிர்ப்பதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் கடைபிடிப்பதாக, கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ் அமைப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அமைப்பின் நிர்வாகிகள் கூறுகையில், 'தகவல் தருவதில் தாமதிக்கும், நியாயமற்ற முறையில் மறுப்பு தெரிவிக்கும் அதிகாரிகளுக்கு கடுமையான அபராதம் விதிக்க சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அபராதம் விதிக்கப்படுவதில்லை.
மேல் முறையீடுகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தீர்க்கப்படுவதில்லை. விதிக்கப்பட்ட அபராதம் பற்றிய விவரத்தை தகவல் ஆணைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள், இந்த விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி தகவல் ஆணையங்களுக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்கின்றனர். இது தொடர்பாக, சென்னை தகவல் உரிமை சட்ட கமிஷனருக்கு இவ்வமைப்பினர் மனு அனுப்பி, உரிய பதிலுக்கு காத்திருக்கின்றனர்.
