ADDED : நவ 26, 2025 07:11 AM
அ ரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, மக்கள் தங்களது உரிமைகளை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டு வரப் பட்டது.
இந்திய பாராளுமன்றத்தின், லோக்சபா, ராஜ்ய சபாவில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவர் ஒப்பதலுடன் , 2005 அக்., 12, முதல் நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டத்தின் கீழ், இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் பொது தகவல்களை கோரலாம். தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோரிடம், அந்த தகவலை கோருவதற்கான காரணத்தை கேட்ககூடாது.
விண்ணப்பத்தை, சம்பந்தப்பட்ட பொது அதிகார அமைப்பின் மத்திய பொது தகவல் அலுவலர் அல்லது மாநில பொதுத் தகவல் அலுவலர் அல்லது மத்திய உதவி பொது தகவல் அலுவலர் அல்லது மாநில உதவி பொதுத்தகவல் அலுவலருக்கு அனுப்பலாம்.
தகவல் கேட்ட முப்பது நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அவசர தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டும்.
விண்ணப்பதாரரின் கோரிக்கை ஏற்க மறுக்கும்போது தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிரிவுகள் 8 மற்றும் 9 இல் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு பொருத்தமான காரணத்தை சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும். மனுதாரர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள நபராக இருந்தால் எவ்வித கட்டணங்களையும் அவரிடமிருந்து வசூலிக்ககூடாது.
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு, குற்றம் புரிய தூண்டுதலாக அமையும் தகவல்கள், நீதிமன்றம், தீர்ப்பாயத்தால் வெளிப்படையாக தடை செய்துள்ள தகவல், நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகள் மீறுதல் உள்ளிட்ட தகவலை கேட்க கூடாது.
இச்சட்டத்தின்படி தவறு செய்யும் தகவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கும் அதிகாரம், மத்தியதகவல் ஆணையம் அல்லது மாநில தகவல் ஆணையத்திடம் உள்ளது.
குறித்த நேரத்தில் தகவல் அளிக்காதது, தவறான தகவல்கள் தருதல் அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தருதல் ஆகியவற்றுக்கு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கலாம்.

