தென்னை நார் தொழிலை மேம்படுத்த எகிறும் எதிர்பார்ப்பு ! தமிழக பட்ஜெட் அறிவிப்புக்கு காத்திருப்பு
தென்னை நார் தொழிலை மேம்படுத்த எகிறும் எதிர்பார்ப்பு ! தமிழக பட்ஜெட் அறிவிப்புக்கு காத்திருப்பு
UPDATED : ஜூலை 13, 2026 08:04 PM
ADDED : ஜூலை 13, 2026 08:02 PM

பொள்ளாச்சி: தென்னை நார் தொழிலை மேம்படுத்த, தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன், உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில், தென்னை சாகுபடியில் கோவை, திருப்பூர் மாவட்டங்கள் முதலிடத்தில் உள்ளன. இங்கு, தென்னை சார்ந்த பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில், தென்னை நார் தொழிலை மேம்படுத்துவதற்கான முக்கிய அறிவிப்புகள் தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்புடன் தென்னை நார் உற்பத்தியாளர்கள் காத்திருக்கின்றனர்.
தேசிய தென்னை நார் கூட்டமைப்பு நிறுவன தலைவர் கவுதமன் கூறியதாவது:
உலகளாவிய வர்த்தகத்தில், தமிழகத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்படும், ஒன்பது லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார், மதிப்புக்கூட்டப்படாமல் கிலோ, 7 ரூபாய் முதல், 11 ரூபாய் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், 16 லட்சம் மெட்ரிக் டன் தென்னை நார் துகள்கள் ஏற்றுமதியாகிறது. உலகளாவிய வர்த்தகத்தில் தென்னை நார் தொழிலை மேம்படுத்த தமிழக அரசு கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்திக்கு, 5 கோடி ரூபாய் முதல், 25 கோடி ரூபாய் மூலதனம் தேவைப்படுகிறது. மாநில அரசு, 40 சதவீதம் மானியம் வழங்கும் போது, 7 - 9 ரூபாய்க்கு மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
தென்னை நார், தென்னை நார் பலகையாக மாற்றப்பட்டு, கிலோ, 150 ரூபாய் வரை விற்க வாய்ப்புகள் உள்ளது. இதன் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு தேங்காய் மட்டை விலை அதிகரிப்பது மட்டுமின்றி, தமிழக அரசுக்கு ஜி.எஸ்.டி., வாயிலாக ஆண்டு ஒன்றுக்கு, 600 கோடி முதல் 800 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
இன்று பருவநிலை மற்றத்தின் வாயிலாக, விவசாயம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், 120க்கும் மேற்பட்ட நாடுகளில், நம் நாட்டில் இருந்து கோகோ பித் இறக்குமதி செய்து மண்ணில்லா விவசாயத்தின் வாயிலாக காய்கறிகளை உற்பத்தி செய்கின்றனர்.
இதில், 125 முதல், 400 சதவீதம் வரை காய்கறிகள் உற்பத்தி அதிகரிக்கிறது. 20 சதவீதம் தண்ணீர் சேமிப்பு, 60 - 70 சதவீதம் உர செலவு கட்டுப்படுத்த முடியும். எனவே, மாநில அரசின் வாயிலாக, பசுமை குடில் திட்டங்களுக்கு கோகோ பித் உபயோகப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதன் வாயிலாக, தண்ணீர் செலவை குறைக்க முடியும்.
உலகளாவிய தென்னை நார் உற்பத்தியில், பொள்ளாச்சி கவனத்தை ஈர்த்துள்ளது. பொள்ளாச்சியில், சர்வதேச தரத்தோடு கூடிய பயிற்சி கூடம் அமைக்க வேண்டும். தொழில்நுட்ப தர ஆய்வகமும் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும்.
இந்த கோரிக்கைகள், மாநில அரசின் வாயிலாக நிறைவேற்றும் போது, தமிழகத்தின் தென்னை வர்த்தகம், 400 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு, தென்னை நார் தொழிலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, பட்ஜெட்டில் கோரிக்கைளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகளை வெளியிடும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
