/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கந்தல் துணியாக 'கட்' ரோடு; கடந்து செல்ல படாதபாடு
/
கந்தல் துணியாக 'கட்' ரோடு; கடந்து செல்ல படாதபாடு
ADDED : ஏப் 21, 2025 06:37 AM

கோவை மாநகராட்சியானது, 254.07 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. 100 வார்டுகளுடைய மாநகராட்சி பராமரிப்பில், 2,618 கி.மீ., நீளமுள்ள சாலைகளும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில், 216 கி.மீ., சாலைகளும் உள்ளன.
மாநகராட்சி பகுதிகளில், மோசமான நிலையில் உள்ள ரோடுகளை சரிசெய்ய, கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் ரூ.215 கோடியில், 860 கி.மீ.,க்கு கடந்தாண்டு ரோடு போடப்பட்டுள்ளது. இதர ரோடுகளை சரிசெய்யும் விதமாக, கடந்தாண்டு கோவை வந்த முதல்வர் மேலும், ரூ.200 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்து சென்றார். அதன்படி, ரூ.100 கோடிக்கு பணிகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், ரூ.100 கோடிக்கு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, பணிகள் நடைபெறவுள்ளன. ரோட்டின் ஆயுள் ஐந்தாண்டுகள் என்றாலும், புதிதாக போடப்படும் ரோடுகள் சிறிது நேரம் பெய்யும் மழைக்கே தாக்குப்பிடிக்காமல், கற்கள் பெயர்ந்து வரும் அவலத்தையும் காணமுடிகிறது.
இப்படி அவசரகதியில் அமைக்கப்படும், தரமற்ற ரோடுகளால் மக்கள் வரிப்பணம் வீணவாதுடன், பராமரிப்புக்கென்று மீண்டும் நிதி ஒதுக்க வேண்டிய சூழல் உருவாகிறது. இப்படி, நல்லாம்பாளையம், மணியகாரம்பாளையம், ராமநாதபுரம், சவுரிபாளையம், புலியகுளம், கண்ணபிரான் மில்ஸ் ரோடு உள்ளிட்ட இடங்களில், குறுக்கு வீதிகளில் ரோடுகள் மோசமாக இருப்பதை காணமுடிகிறது.
அதேபோல், கே.கே. புதுார், கோவில்மேடு, இடையர்பாளையம், ஜி.என்., மில்ஸ், கணபதி, சங்கனுார், சுந்தராபுரம், இடையர்பாளையம் ரோடு, லட்சுமி மில்ஸ், பாப்பநாயக்கன்பாளையம், சிங்காநல்லுார் போன்ற பல்வேறு இடங்களிலும் படுமோசமான ரோடுகள், வாகன ஓட்டிகளை பதறவைக்கின்றன. மழை காலங்களில் பாதசாரிகள், இந்த ரோடுகளால் படாதபாடு படுகின்றனர்.
குண்டும், குழியுமான ரோடுகளால் வாகன ஓட்டிகளின் முதுகெலும்புக்கும், அவர்களது வாகனங்களுக்கும் தேய்மானம் ஏற்படுவது, மற்றொரு வேதனை.
எனவே, கோடிக்கணக்கான பணம் செலவிட்டு, புதிதாக போடப்படும் ரோடுகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் சொல்லும் ஐந்தாண்டு அளவுக்காவது, அதன் ஆயுள் தாக்குபிடிக்கும் வகையில் அமைய வேண்டும்.

