/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பைக் பேரணி
/
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பைக் பேரணி
ADDED : நவ 17, 2024 10:27 PM

கோவை; சாலை பாதுகாப்பு - ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த கோவையில், 500க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்ட பைக் பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை கோவை மக்களிடம் ஏற்படுத்த பைக் பேரணி நிகழ்ச்சியை ஆனமலைஸ் நிறுவனம் மற்றும் உயிர் அறக்கட்டளை இணைந்து கோவை விழாவின் ஒரு அங்கமாக நேற்று நடத்தினர்.
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் துவங்கிய இந்த பேரணியில், 500க்கும் மேற்பட்டோர் தங்களது இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து, கொடிசியா மைதானம் வரை சென்றனர்.இந்த பேரணியை கோவை மாநகர ஆயுதப்படை துணை கமிஷனர் ராஜ்கண்ணா, போக்குவரத்துத் துணை கமிஷனர் அசோக்குமார்மற்றும் போக்குவரத்துக் கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன், கொடியசைத்து துவங்கி வைத்தனர்.
கோவை விழாவின் தலைவர் அருண் செந்தில்நாதன், துணைத் தலைவர்கள் சவுமியா காயத்ரி, சரிதா லட்சுமி, உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர் சந்திரசேகர், கமிட்டி உறுப்பினர்கள் சுப்பிரமணியன், நடராஜன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் இளைஞர்கள் வாயிலாக சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் எடுத்ததற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை துணை கமிஷனர் ராஜ்கண்ணா பாராட்டினார்.
துணை கமிஷனர் அசோக்குமார் பேசுகையில், “வாகனங்களை வேகமாக இயக்குவது தான் பயணத்தை இனிமையாக்கும் என்று எண்ணக்கூடாது. அதை நிதானமாக இயக்கினாலும் அந்தப் பயணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியும்,” என்றார்.