ADDED : ஆக 26, 2026 05:02 PM

பொள்ளாச்சி: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் பொள்ளாச்சி கோட்டம் சார்பில், உயிர் இழந்த சாலை பணியாளர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் விரைந்து பணி வழங்க வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை மனு முறையீடு இயக்கம், பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்தது.
கோட்ட தலைவர் சின்னமாரிமுத்து தலைமை வகித்தார். கோட்ட துணை தலைவர் வெள்ளியங்கிரி வரவேற்றார். கோட்ட செயலாளர் ஜெகநாதன், கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்ரமணியன், மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ் பேசினர். நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
அதில், சாலை பணியாளர்களில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்க கோரி விண்ணப்பித்து காத்திருப்போருக்கு, விரைந்து பணி வழங்க வேண்டும். குடும்பத்தலைவரை இழந்து வாடும் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் உடனடியாக வழங்க வேண்டும்.
கோட்ட பொறியாளர் வாயிலாக சாலைப்பணியாளர் பணி வழங்க வழிவகை செய்து, நடைமுறையில் உள்ள மறைமுகத்தடைகளை நீக்க வேண்டும். இவையுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
