/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றணும்
/
சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றணும்
ADDED : டிச 15, 2024 11:11 PM

வால்பாறை; வால்பாறை நகரில், நெடுஞ்சாலைத்துறை ரோடு ஆக்கிரமிப்பால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. இங்கு கோவை, திருப்பூர், திண்டுக்கல் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர்.
இவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரோட்டின் இருபக்கமும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகிறது.
இது அவர்களுக்கு தீராத தலைவலியை ஏற்படுத்தி வருகிறது. அங்குபொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாகி விட்டது.
இதன் காரணமாக, பொதுமக்கள், மாணவ, மாணவியர் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
ஸ்டேன்மோர் சந்திப்பில் (அரசு கலைக்கல்லுாரி முன்புறம்) நெடுஞ்சாலைத்துறை ரோடு ஆக்கிரமிக்கப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஸ்டேன்மோர் சந்திப்பு வரையிலான, நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.
சாலையோர ஆக்கிரமிப்பினால் சுற்றுலா வாகனங்கள் கூட நிறுத்த இடமில்லாமல் தவிக்கின்றனர். அதனால், ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும்' என்றனர்.
வால்பாறையில் உள்ள இந்த ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.