/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவல்கள் விற்பனை சந்தையில் விறுவிறுப்பு
/
சேவல்கள் விற்பனை சந்தையில் விறுவிறுப்பு
ADDED : ஜன 09, 2025 11:38 PM

பொள்ளாச்சி; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி சந்தையில் சேவல் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள், பொங்கல் பண்டிகை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். அவ்வகையில், கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டுகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி காந்தி வாரச்சந்தையில் நேற்று சேவல் விற்பனை களைகட்டியது. பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த சேவல்களை வாங்க, பொள்ளாச்சி மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாாரிகள் வந்தனர். சேவல் பந்தய ஆர்வலர்கள், சேவல்களின் உயரம், எடை, நிறம் போன்றவற்றுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்தனர். இதனால், வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை பந்தய சேவல் விற்பனை நடக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று, 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
பொங்கல் பண்டிகைக்கு சேவல் பந்தயம் கிராம பகுதிகளில் நடக்கிறது. இதனை முன்னிட்டு, சேவல் வளர்ப்போர், அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சேவல்களில் கம்பீரம் மற்றும் அவற்றை மோத விட்டு அதன் ஆக்ரோஷத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு சேவல் இரண்டாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை விற்பனையானது. வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
இவ்வாறு, கூறினர்.