கட்றதுக்குள்ள கண்ண கட்டுது ரூ.10,000 ஆனது ஒரு லோடு
கட்றதுக்குள்ள கண்ண கட்டுது ரூ.10,000 ஆனது ஒரு லோடு
ADDED : செப் 13, 2026 06:43 PM
அன்னுார்: ‘கிராவல் மண் ஒரு லோடு, ரூ.10 ஆயிரமாக அதிகரித்ததால், கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன’ என, பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்னுார் தாலுகாவில், குன்னத்துார், கணேசபுரம், கரியாம்பாளையம், கஞ்சப்பள்ளி உட்பட பகுதிகளில், புதிதாக தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன; நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். கிராவல் மண் விலை அதிகரித்ததால், பணி பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தனியார் கட்டுமான நிறுவன பொறியாளர்கள் கூறியதாவது:
கனிமவளத்துறை மற்றும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு மற்றும் லாரிகள் சிறைபிடிப்பு ஆகிய நடவடிக்கைகளால், மண் எடுத்து வருவது குறைந்துவிட்டது. கனிமவளத்துறையில் முறையாக பர்மிட் பெற நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இத்துடன் வறண்டுள்ள நீர் நிலைகளில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கிராவல் மண் வரத்து குறைந்து விட்டது. மூன்று மாதங்களுக்கு முன், நான்கு யூனிட் கொண்ட ஒரு லோடு கிராவல் மண் 7,000 ரூபாயாக இருந்தது. தற்போது 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவும் 15 கி.மீ., சுற்றளவுக்கு மட்டும் இந்தக் கட்டணம். அதற்கு மேல், கூடுதல் தொகை வசூலிக்கின்றனர். மணல் தட்டுப்பாடு ஏற்பட்டபோது அதற்கு மாற்றாக, எம்.சாண்ட் உற்பத்தி செய்யப்பட்டது. அதேபோல், கிராவல் மண்ணுக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது கிராவல் மண் தட்டுப்பாடு இல்லாமல் கட்டுமான பணிகளுக்கு நியாயமான விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
