ADDED : மே 21, 2026 09:08 AM
போத்தனூர்: எட்டிமடையிலுள்ள தனியார் பல்கலையில் ஆர்.எஸ்.எஸ். சார்பில், 15 நாட்கள் பன்முக பயிற்சி நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 274 பேர் பங்கேற்று, உடற்பயிற்சி, ஒழுக்கப் பயிற்சி, தேசப்பற்று, சமூகப்பணி மற்றும் தலைமை திறன் தொடர்பான பயிற்சிகளை பெற்றனர்.
சங்கத்தின் சேவை திட்டங்கள் குறித்த பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. 41 பயிற்சியாளர்கள், 55 முழு நேர காரியகர்கள் முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர்.
நேற்று முன்தினம் நடந்த நிறைவு விழாவிற்கு, அமிர்த விஸ்வ வித்யாபீடம் சார்பில், தபஸ்யாம் மருதானந்தபுரி சுவாமி தலைமை வகித்து பேசினார்.
அமைப்பின் பொறுப்பாளர் சங்கர் பேசுகையில், ''தேச பக்தி கொண்டவர்களை உருவாக்குவதே சங்கத்தின் நோக்கம். ஜாதி, மதம், மொழி, அரசியல் வேறுபாடுகளை கடந்து, ஹிந்து ஒற்றுமை உருவாகி வருகிறது. நாடு முழுவதும் சேவை மனப்பான்மையுடன் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன,'' என்றார்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் சேவகர்கள், பொதுமக்கள், மற்றும் ஆன்மிக அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
