/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கிராமிய கலைகளை வளர்க்க வேண்டும்'
/
'கிராமிய கலைகளை வளர்க்க வேண்டும்'
ADDED : ஜன 06, 2025 01:59 AM

கோவை, ; ''எழுத்தாளர்களும், கலைஞர்களும் இணைந்து, கிராமிய கலைகளை அழியாமல் வளர்க்க முன் வர வேண்டும்,'' என, பத்மஸ்ரீ விருது பெற்ற பத்ரப்பன் பேசினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், பத்மஸ்ரீ விருது பெற்ற நாட்டுப்புற இசைக்கலைஞர் பத்ரப்பனுக்கு பாராட்டு விழா, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள தாமஸ் கிளப் அரங்கில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கவிஞர் விஷ்ணு தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத்தலைவர் மணி வாழ்த்துரை வழங்கினார்.
பத்மஸ்ரீ விருதாளர் பத்ரப்பன் பேசியதாவது:
மனிதன் பேசத் துவங்கிய காலத்தில் இருந்து ஆட்டம், பாட்டு, கூத்து இருந்து வருகிறது. பாடல்கள் இல்லாமல் மனித வாழ்க்கை இல்லை. தாலாட்டில் துவங்கி ஒப்பாரியில் முடிகிறது. இசையோடுதான் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, இன்றைக்கும் நாட்டுப்புறக்கலைகள் இருந்து வருகின்றன. இது அழிந்து போகாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கான பணியை தான், நான் செய்து வருகிறேன்.
பல இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வள்ளிக்கும்மி ஆட்ட பயிற்சி அளித்து வருகிறேன். எழுத்தாளர்களும், கலைஞர்களும் இணைந்து இந்த கிராமிய கலைகள் அழியாமல் வளர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், பொங்கல் சிறப்பு கவியரங்கம் நடந்தது. கவிஞர்கள் கரீம், தங்கமுருகேசன், கன்னியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.