தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; பா.ஜ., அ.தி.மு.க., ஆதரவு
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; பா.ஜ., அ.தி.மு.க., ஆதரவு
ADDED : ஆக 14, 2025 08:55 PM

மேட்டுப்பாளையம்; காரமடையில் தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இப்போராட்டத்திற்கு பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., ஆதரவு தெரிவித்துள்ளது.
காரமடை நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நேற்று முன் தினம் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தினக்கூலியாக தற்போது ரூ.442 தருகின்றனர். மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி ரூ.606 வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து இந்த போராட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக காரமடை நகராட்சியின் பா.ஜ.,கவுன்சிலர் விக்னேஷ், அ.தி.மு.க., கவுன்சிலர் வனிதா மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர் நேற்று நேரில் வந்து தூய்மைப் பணியாளர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் நகராட்சி நிர்வாகத்திடமும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தினர்.
