/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் அறிவியல் தினம் கொண்டாட்டம்
/
பள்ளிகளில் அறிவியல் தினம் கொண்டாட்டம்
ADDED : பிப் 28, 2024 09:21 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளியில், அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
அறிவியல் விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் கண்டுபிடித்த 'ராமன் விளைவு' காரணமாக ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் பிப்ரவரி 28ம் தேதி உலக அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, பொள்ளாச்சி, நெகமம் அருகே சின்னேரிபாளையம் ஸ்வஸ்திக் மெட்ரிகுலேஷன் பள்ளியில், தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.
மாணவர்களிடையே அறிவியல் சிந்தனையை வளர்க்கும் விதமாகவும், மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாகவும், அறிவியல் தின விழா நடைபெற்றது.
விழாவில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் அறிவியல் விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் திருவுருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். பள்ளியின் தாளாளர் தீபகாந்தி தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் தமிழரசி மற்றும் ஆங்கில ஆசிரியர் மோகன்ராஜ் ஆகியோர் சர்.சி.வி.ராமன் வாழ்க்கை வரலாறு பற்றியும் அறிவியல் தினம் குறித்தும் பேசினர்.
ஆசிரியர்கள் வனிதாமணி, மலர்விழி, ராம்பிரியா ஆகியோர் அறிவியல் விஞ்ஞானிகள் குறித்து பேசினர். பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அறிவியல் தினத்தையொட்டி கண்காட்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை வகித்தார்.
ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலானமாணவர்கள், ஒளிவிலகல், ஒளி நேர்கோட்டில் செல்லுதல், மாய எழுத்துக்கள், கழிவு நீரை துாய்மையாக்கும் முறை, பல்வேறு படிநிலைகளில் நீரை துாய்மைப்படுத்தல், ஊதாமல் பெரிதாகும் பலுான், முடிந்தால் ஊதிப்பார்உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தி அசத்தினர்.
படைப்புகளை ஆய்வு செய்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கீதா,அன்றாட வாழ்வில் அறிவியல் சோதனைகள் எங்கெல்லாம் பயன்படுகிறது என கேள்விகள் கேட்டு, அதற்கான விளக்கம் கூறி கலந்துரையாடி தெளிவுபடுத்தினார்.
மேலும், பல்வேறு வகையான பிரையோபைட்டுகள், டெரிடோபைட்டுகள், கடல்பாசிகள் உண்மை பாட்டில் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
நவீன அறிவியலில் செயற்கை நுண்ணறிவான ரோபோக்கள், பல்வேறு துறைகளில் பயன்பாடுகள் பற்றி நாடகமாக நடித்துக் காட்டினர். வரும், 2025ம் ஆண்டு ரோபோக்கள் இல்லாத துறையே கிடையாது என்றளவில், ரோபோக்கள் மனிதர்களை ஆட்சி செய்யும் என்ற அறிவியலின் உச்சகட்ட வளர்ச்சி பற்றி 'செயற்கை நுண்ணறிவு' நாடகமாக நடித்து காட்டினர். மாணவர்களை, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

