ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
ஓட்டுச்சாவடி பணியாளர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 15, 2026 06:54 PM

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பில், 1,700க்கும் மேற்பட்ட தேர்தல் பணியாளர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், 360 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், மூன்று ஓட்டுச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் நால்வர் பணியாற்றுவர். இவர்களுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு மற்றும் தபால் ஓட்டுக்கள் வழங்கும் வகுப்பு, ஆலாங்கொம்பு அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம்., சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்தது. 1,700 தேர்தல் பணியாளர்கள் பங்கேற்றனர்.
பயிற்சி வகுப்பை, தேர்தல் பார்வையாளர் சுனில் குமார் யாதவ், தேர்தல் நடத்தும் அலுவலர் விஸ்வநாதன் ஆய்வு செய்தனர். 'பயிற்சியில் பங்கேற்ற தேர்தல் பணியாளர்கள் அனைவரும், தங்களுக்குள் ஏற்படும் சந்தேகங்களை, நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஓட்டுச்சாவடியில் சந்தேகம் இல்லாமல் தங்களது பணியை விரைவாக செய்ய வேண்டும்' என, தேர்தல் பார்வையாளர் பேசினார்.
ஆய்வில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா, தேர்தல் துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
