/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வழித்தடம் முழுவதும் கடைகள்; வால்பாறையில் அவதி
/
வழித்தடம் முழுவதும் கடைகள்; வால்பாறையில் அவதி
ADDED : செப் 07, 2025 09:20 PM
வால்பாறை; சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருவதால், வால்பாறை நகரில் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் சாலையோரமாக உணவு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. மக்களுக்கு இடையூறு இல்லாமலும், சிறு வியாபாரிகளும் பாதிக்காத வகையில், மத்திய அரசு திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகளுக்கு, 22 தள்ளுவண்டி வாகனங்கள் கடந்த 2023ல், வழங்கப்பட்டது.
இந்த கடைகளை தவிர சிறு வியாபாரிகள் பலரும் தற்போது நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால், உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் நடக்க வழியில்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை நகரில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையை முற்றிலுமாக ஆக்கிரமித்து வியாபாரிகள் கடை வைத்துள்ளனர். வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ஒரு கி.மீ., துாரத்திற்கு, நெடுஞ்சாலைத்துறை ரோட்டை ஆக்கிரமித்து கடைகளும், வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
நடந்து செல்ல வழியில்லாமல் ஆபத்தான முறையில் போக்குவரத்து நிறைந்த மெயின் ரோட்டில் செல்ல வேண்டியுள்ளது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புக்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டை ஆக்கிரமித்து வைக்கபட்டுள்ள கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.