/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒற்றை யானை முகாம் பீதியில் தொழிலாளர்கள்
/
ஒற்றை யானை முகாம் பீதியில் தொழிலாளர்கள்
ADDED : நவ 14, 2024 04:37 AM

வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதியில் ஒரு வாரத்துக்கு மேலாக, ஒற்றை யானை முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை மலைப்பகுதியில், தென்மேற்குப்பருவ மழைக்கு பின், வனவளம் பசுமையாக இருப்பதால் நுாற்றுக்கணக்கான யானைகள், மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை, பன்னிமேடு, வால்பாறையில் பல்வேறு எஸ்டேட்களில் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.
எஸ்டேட் பகுதியில் முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தண்ணீர் மற்றும் உணவு தேடி ரோட்டை கடக்கின்றன. சில எஸ்டேட் பகுதியில் தேயிலை காட்டிலும் பகல் நேரத்தில் முகாமிடுவதால் தேயிலை தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சவராங்காடு, ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரமாக ஒற்றையானை பகல் நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு அருகே முகாமிட்டுள்ளது.
கடந்த வாரம் தேயிலை பறிக்கும் பணிக்காக சென்ற பெண் தொழிலாளி யானையை கண்டு அலறியடித்து ஓட்டம் பிடித்ததில், தடுமாறி விழுந்து காயமடைந்தார். எஸ்டேட் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. தொடர்ந்து, எஸ்டேட் பகுதியிலேயே யானை முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒற்றை யானையால் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் யானை முகாமிட்டுள்ளது. யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழையாதவாறு, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,' என்றனர்.