/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்ல விலையால் சின்ன வெங்காய சாகுபடி அதிகரிப்பு
/
நல்ல விலையால் சின்ன வெங்காய சாகுபடி அதிகரிப்பு
ADDED : ஜன 21, 2025 11:50 PM
-- நமது நிருபர் -
நல்ல விலை கிடைத்துவருவதால், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி அதிகரித்துள்ளது.
கடந்த ஓராண்டுக்கு மேலாக, சின்ன வெங்காயம் விலை, கிலோ 60 ரூபாயில் இருந்து குறையவே இல்லை. சில நேரங்களில், கிலோ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதன்காரணமாக, காய்கறி விவசாயிகள், சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய அதிகம் விரும்புகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, நல்ல விலை கிடைப்பதால் திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், சின்ன வெங்காயம் சாகுபடி அதிகரித்துள்ளது.
ஒரு ஏக்கர் பரப்பில் வெங்காயம் பயிரிட, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. நான்கு நான்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நன்றாக விளைந்தால், ஏக்கருக்கு, 7,000 கிலோ வரை வெங்காயம் கிடைக்கும். ஆறு நாட்கள் உலர்த்தி, இருப்பு வைத்து விற்கலாம்.
திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள், அடிக்கடி சின்ன வெங்காயமும் சாகுபடி செய்வார்கள். சமீபமாக நல்ல விலை கிடைப்பதால், சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்து, பட்டறையில் இருப்பு வைத்து, விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த நவ., மாதம் நடவு செய்ததால், தற்போது நன்கு வளர்ந்துள்ளது; 60 நாட்களுக்கு பிறகு, வெங்காயத்தாள் வறண்டதும், வெங்காயம் அறுவடை துவக்கும்.
சின்ன வெங்காய வரத்து அதிகரிக்கும் போது, விலையில் சிறிய மாற்றம் உருவாக வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.