ADDED : ஜன 13, 2026 06:16 AM

- நிருபர் குழு -:
புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து, அரசுப்பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
போகிப்பண்டிகையின் போது, காற்று மாசு ஏற்படுத்தும் வகையில், டயர் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதை தடுக்க, பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதன்படி மடத்துக்குளம் வட்டார பள்ளிகளில், நேற்று பள்ளி மாணவ, மாணவியர் புகையில்லா போகி கொண்டாட உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
பழைய டயர், டியூப், பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க மாட்டோம். மாசற்ற, புகையில்லா போகியை கொண்டாடுவோம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என மாணவ, மாணவியர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
* கொண்டவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மடத்துக்குளம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்கள், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
* மேற்கு குமரலிங்கம், கொழுமம், கிருஷ்ணாபுரம், சர்க்கார்கண்ணாடிப்புத்துார், குப்பம்பாளையம், வேடபட்டி, ருத்திரபாளையம், பெரியவட்டாரம், முள்ளங்கிவலசு, கருப்புசாமிபுதுார், குருவக்களம் உள்ளிட்ட அரசுப்பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் மாணவ, மாணவியர், புகையில்லா போகி கொண்டாட உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
* பொள்ளாச்சி நகராட்சி சார்பில், புகையில்லா போகி குறித்து உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி, சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் குமரன் முன்னிலை வகித்தார். நகர்நல அலுவலர் தாமரைக்கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
புகையில்லா போகி கொண்டாடுவதன் அவசியம் குறித்து மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, குப்பையை முறையாக தரம் பிரிப்பது குறித்து மாணவர்களிடம் விளக்கப்பட்டது. போகியன்று பொருட்களை எரிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. புகையில்லா போகி கொண்டாட அறிவுறுத்தப்பட்டது.

