/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒரு சிகரெட் புகைத்தால் வாழ்நாளில் 14 நிமிடம் குறையும்'
/
'ஒரு சிகரெட் புகைத்தால் வாழ்நாளில் 14 நிமிடம் குறையும்'
'ஒரு சிகரெட் புகைத்தால் வாழ்நாளில் 14 நிமிடம் குறையும்'
'ஒரு சிகரெட் புகைத்தால் வாழ்நாளில் 14 நிமிடம் குறையும்'
ADDED : ஜூன் 08, 2025 10:19 PM

மேட்டுப்பாளையம்; ஒவ்வொரு சிகரெட்டினாலும் புகைப்பிடிப்பவருக்கு வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது என சுகாதார துறையினர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
காரமடை வட்டாரத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் புகையிலை இல்லா கல்வி நிலையம் என உறுதி செய்யும் வகையில், காரமடை வட்டார சுகாதார துறை சார்பில், பள்ளிகளை சுற்றி 100 மீட்டர் தூரத்தில் புகையிலை விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட பகுதி என அடர் மஞ்சள் நிறத்தில் கோடுகள் வரைந்து, எல்லையை உறுதி செய்யும் திட்டமானது துவங்கியுள்ளது.
மேலும், பள்ளிகளுக்கு காரமடை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதாகர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன், சுகாதார ஆய்வாளர் சியாமளா உள்ளிட்ட சுகாதார துறையினர் நேரடியாக சென்று புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், ''அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மெல்லும் வகை புகையிலையில் 3,000 வகையிலான நச்சுப் பொருட்கள் உள்ளன. பீடி, சிகரெட் போன்ற புகைக்கும் புகையிலையில் 4,000 வகை நச்சுப் பொருட்கள் உள்ளன. இவற்றுள் 200-க்கும் மேற்பட்டவை புற்றுநோயை உருவாக்கும் நச்சுப் பொருட்கள் ஆகும்.
புகையிலையில் நிக்கோட்டின் என்ற அடிமைப்படுத்தும் பொருள் உள்ளது. இது கஞ்சா, ஹான்ஸை விட பல மடங்கு அதிக அடிமைப்படுத்தும் சக்தி வாய்ந்தது. வாய், குரல்வளை, நுரையீரல் புற்றுநோய் 90 சதவீதம் புகையிலை பழக்கத்தால் மட்டுமே வருகிறது. ஒவ்வொரு சிகரெட்டினாலும் புகைப்பிடிப்பவருக்கு வாழ்நாளில் 14 நிமிடங்கள் குறைகிறது,'' என்றனர்.