/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனியால் அதிகரித்தது அலங்கார பூக்கள் விலை
/
பனியால் அதிகரித்தது அலங்கார பூக்கள் விலை
ADDED : டிச 03, 2025 06:27 AM
பொள்ளாச்சி: பெங்களூரு, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவின் காரணமாக, மணமேடை அலங்காரத்திற்கான பூக்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.
திருமண நிகழ்ச்சியின் போது, மணமேடை அலங்காரம் பிரதானமாக கருதப்படுகிறது. பணத்திற்கு ஏற்ப மணமேடை அலங்காரம் வேறுபடுகிறது. அதன்படி, குறைந்த பட்சம், 12 ஆயிரம் ரூபாய் முதல், அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் கடந்தும் மேடை அலங்காரம் செய்யப்படுகிறது.
மேடை அலங்காரத்தில், அனைத்து வகை பூக்களும், தாள் பூக்களும், அலங்கார செடிகளும் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக, பொள்ளாச்சி பூ மார்க்கெட்டிற்கு, கெர்பரா, ரோஜா, கார்னிஷ், கிரிஸான்தமம், கிளாடியோலஸ், ஆர்க்கிட், துலிப், ஜிப்சம், லில்லியம் உள்ளிட்ட பல்வேறு பூக்களும் தருவிக்கப்படுகின்றன.
முகூர்த்த நாளின் போது, இந்த பூக்களின் விலை வழக்கத்துக்கு மாறாக சற்று அதிகரித்தே இருக்கும். தற்போது, பெங்களூரு, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவின் தாக்கம் காரணமாக, இவ்வகை பூக்களின் வரத்தும் சற்று பாதிக்கப்பட்டு, விலையும் அதிகரித்துள்ளது.
பூ வியாபாரிகள் கூறுகையில், 'மேடை அலங்கார பூக்கள் விலை சற்று அதிகரித்துள்ளது. தற்போது, பட்டன்ரோஸ் கிலோ, 250 ரூபாய்; தாஜ்மகால் ரோஸ் ஒரு கட்டு (20 எண்ணிக்கை) 400 ரூபாய், ஜெரிபரா ஒரு கட்டு (20 எண்ணிக்கை) 200 ரூபாய் என, விற்பனை செய்யப்படுகிறது,' என்றனர்.

