காளப்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு :அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் உறுதி
காளப்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு :அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் உறுதி
ADDED : ஏப் 15, 2026 08:22 PM

பெ.நா.பாளையம்: ''காளப்பட்டிக்கு அத்திக்கடவு குடிநீர் கூடுதலாக வழங்க ஏற்பாடு செய்யப்படும்,'' என, கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார் கூறினார்.
கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் அருண்குமார் காளப்பட்டி, வீரியம் பாளையம், நேரு நகர், ஆர்.ஜி.புதூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
விளாங்குறிச்சி காளப்பட்டி சாலை முதல் காளப்பட்டி சிட்ரா சாலைக்கு, ரூ.2.5 கோடி மதிப்பில் இணைப்பு சாலை உருவாக்கப்பட்டுள்ளது. சிட்ரா - குரும்பபாளையம் சாலையை விரிவாக்கம் செய்ய, அ.தி.மு.க., அரசு பதவி ஏற்ற உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
காளப்பட்டி பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண கூடுதல் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்படும். அத்திக்கடவு குடிநீர் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை சத்தி சாலையில் சரவணம்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அ.தி.மு.க., அரசு அமைந்த உடன், 2000 அம்மா மினி கிளினிக்குகள் நவீன மருத்துவ வசதியுடன் துவக்கப்படும்.
அத்திக்கடவு அவிநாசி திட்டம் பேஸ் - 2 செயல்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆட்டோ வாங்க, 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், நடிகர் ரவி மரியா, புறநகர் வடக்கு மாவட்ட அவை தலைவர் குமாரசாமி, காளப்பட்டி பகுதி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சண்முகசுந்தரம், கிளை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், சேகர் பா.ஜ., காளப்பட்டி மண்டல் தலைவர் உமாதேவி, பகுதி அம்மா பேரவை செயலாளர் குறிஞ்சி மலர், அ.தி.மு.க., வட்டச் செயலாளர்கள், பா.ஜ., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
