ஏனோ முடங்கியது ஆவின் செயலி; இரவு வரை காத்திருந்த முகவர்கள்
ஏனோ முடங்கியது ஆவின் செயலி; இரவு வரை காத்திருந்த முகவர்கள்
ADDED : ஜூன் 02, 2026 06:03 AM

கோவை: கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் (ஆவின்) கீழ் 600க்கும் அதிகமான முகவர்கள் உள்ளனர்.
கடந்த மார்ச் மாதம், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஆவின் நிறுவனத்தால் புதிய மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலி மூலமாகவே அனைத்து சேவைகளையும் செய்ய வேண்டும் என கட்டாயமாக்கப்பட்டது.
இதனால், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும், செயலியை பயன்படுத்த தெரியாத மூத்த முகவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், நேற்று ஆவின் செயலி திடீரென முடங்கியதால், அடுத்த நாள் தேவைக்கான பால் ஆர்டர்களை பதிவு செய்ய முடியாமலும், கட்டணம் செலுத்த முடியாமலும் முகவர்கள் தவித்தனர்.
ஒருசில முகவர்களுக்கு வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்ட போதிலும், ஆர்டர் பதிவு ஆகவில்லை எனத் தெரிகிறது. அதிருப்தியடைந்த முகவர்கள், புகார்களை ஆவின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்-அப் குழுவில் அடுக்கினர்.
இதனையடுத்து, நேற்று இரவு 7 மணிக்கு மேல், ஆர்டர் செய்வதற்காக கூடுதல் கால அவகாசத்தை ஆவின் நிர்வாகம் வழங்கியது.
ஆவின் முகவர் ஒருவர் கூறுகையில், 'ஆவின் செயலியில் தினமும் மாலை 6 மணிக்குள் அடுத்த நாள் தேவைக்கான பாலை ஆர்டர் செய்து, பணத்தையும் செலுத்திவிட வேண்டும். தவறினால் பால் வினியோகம் செய்யப்பட மாட்டாது. ஆனால், புதிய செயலியில் ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட தொழில்நுட்பக் குளறுபடிகள் நீடிக்கின்றன. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் முறையான தீர்வு கிடைக்கவில்லை' என்றார்.
