/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தொகுதிகள் மறுவரையறையில் தென்மாநிலங்கள் பாதிக்கக்கூடாது'
/
'தொகுதிகள் மறுவரையறையில் தென்மாநிலங்கள் பாதிக்கக்கூடாது'
'தொகுதிகள் மறுவரையறையில் தென்மாநிலங்கள் பாதிக்கக்கூடாது'
'தொகுதிகள் மறுவரையறையில் தென்மாநிலங்கள் பாதிக்கக்கூடாது'
ADDED : செப் 09, 2025 08:33 AM
கோவை: 'இந்தியா டுடே தென்னிந்திய மாநாடு - 2025' கோவையில் நேற்று துவங்கியது.
தென்மாநிலங்களின் புவிசார் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கலை, விளையாட்டு, பண்பாடு, சமூக முன்னேற்றம் என பல்வேறு தளங்களில், அறிவுசார் உரையாடலாக இம்மாநாடு நடந்தது. இன்றும் நடக்கிறது. 'இந்தியா டுடே' கன்சல்டிங் எடிட்டர் ராஜ்தீப் சர்தேசாய், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்திருத்தம் மற்றும் பார்லி., தொகுதி மறுசீரமைப்பு குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர்கள் குரேசி, ராவத், அசோக் லவாசா ஆகியோருடன் உரையாடினார்.
ஏற்க முடியாது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தேவையானதே. அது மேற்கொள்ளப்படும் நேரம் சரியானதா என்ற கேள்வி எழுகிறது. நீக்கப்படும் வாக்காளருக்கு விளக்கம் அளிக்க போதிய அவகாசம் அளிக்க வேண்டும்.
பீஹார் போன்ற அடிக்கடி இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்படும் மாநிலத்தில் மக்கள், தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடுவரா அல்லது இழந்த ஆவணங்களைப் பெற ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்குவார்களா?
ஆவணங்களின் அடிப்படையில், ஒருவரின் அரசியலமைப்பு உரிமை மறுக்கப்படக்கூடாது. 30 ஆண்டுகளாக வாக்காளர் அடையாள அட்டை உட்பட, தொழில்நுட்ப உதவியோடு தயாரித்த வாக்காளர் பட்டியலை, வெறும் மூன்று மாதங்களில் சிதைப்பதை ஏற்க முடியாது.
ஓட்டுத் திருட்டு எதிர்க்கட்சித் தலைவரான ராகுலின் குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டு, அதனை விசாரணைக்கு உட்படுத்தி, உண்மையை மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஒரு சாமான்ய வாக்காளர் சந்தேகத்தை எழுப்பியிருந்தாலும், தீவிரமாக விசாரிக்க வேண்டுமே தவிர, குற்றவியல் நடவடிக்கையைப் போல், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென, தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியிருக்கக் கூடாது. ஓட்டுத் திருட்டு என்பது அரசியல் சொல்லாடல்.
தொகுதி மறுவரையறை மக்கள் தொகை அடிப்படையில், தொகுதிகள் என்பது மிகப்பெரிய விவாதம். தென் மாநிலங்கள் தங்களின் அரசியல் பிரதி நிதித்துவம் குறைக்கப்படும் என, அஞ்சுவதில் பொருள் இல்லாமல் இல்லை. குடும்ப கட்டுப்பாடு என்ற தேசிய திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக, தென்மாநிலங்களுக்கு தண்டனை தருவதாகி விடக்கூடாது .
மக்கள் தொகை அடிப்படையில் மட்டும் மறு வரையறை கூடாது. ஜி.டி.பி.போன்ற இதர காரணிகளும் கட்டாயம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். நிதிக்குழு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதிப் பகிர்வு என்பதைக் கணக்கிடுகிறது. அதேபோல், அதிகாரப் பகிர்வும் நியாயமாக இருக்க, கணக்கீடு உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.