/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கரை ஆண்டுகளாக ஜவ்வாய் இழுக்கும் மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிகள்; விரைவு படுத்துங்க!
/
நான்கரை ஆண்டுகளாக ஜவ்வாய் இழுக்கும் மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிகள்; விரைவு படுத்துங்க!
நான்கரை ஆண்டுகளாக ஜவ்வாய் இழுக்கும் மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிகள்; விரைவு படுத்துங்க!
நான்கரை ஆண்டுகளாக ஜவ்வாய் இழுக்கும் மேற்கு புறவழிச்சாலை திட்ட பணிகள்; விரைவு படுத்துங்க!
UPDATED : ஆக 09, 2025 08:33 AM
ADDED : ஆக 08, 2025 08:22 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை பணிகள் இழுபறியாக நடப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. விரைந்து முடிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
பொள்ளாச்சி நகரில் நிலவும் நெரிசலை கட்டுப்படுத்த மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்காக, மொத்தம், 73 கோடியே, 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த சாலை, கோவை ரோடு, ஆச்சிப்பட்டி சக்தி மில் அருகே துவங்கி, சங்கம்பாளையம், ஆர்.பொன்னாபுரம், தாளக்கரை, நல்லுார் வழியாக, ஜமீன் ஊத்துக்குளி கைகாட்டி வரை, 8.9 கி.மீ., துாரத்துக்கு, 10 மீட்டர் அகலத்தில், ரோடு அமைக்கப்படுகிறது. ரோட்டின் இருபக்கமும், மூன்று மீட்டருக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது.
இந்த புறவழிச்சாலை பணிக்காக, விவசாயிகள் உள்ளிட்ட தனியாரிடம் இருந்து, 34,718 சதுர மீட்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கடந்த, 2021ம் ஆண்டு திட்டப் பணிகள் துவங்கி, நான்கு மாதங்கள் விறுவிறுப்பாக நடந்து. இதற்காக, 171 மரங்கள் வெட்டப்பட்டன.அதன்பின், ஆமை வேகத்தில் நடைபெற்றன.
இப்பணிக்காக, ஜமீன் ஊத்துக்குளியில் இருந்து கோவை ரோடு ஆ.சங்கம்பாளையம் வரை, நான்கு கி.மீ., துாரத்துக்கு பழைய குடிநீர் குழாய்களுக்கு மாற்றாக, ஐந்து கோடி ரூபாய் செலவில் புதிய குழாய் மாற்றி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இதை தொடர்ந்து, மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகினர்.இவ்வழியாக செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்வோர் அவதிக்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து பலமுறை விவசாயிகள், பொதுமக்கள் புகார் கொடுத்து வலியுறுத்தி நிலையில், கடந்தாண்டு கையகப்படுத்திய நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டு, பணிகள் மீண்டும் கைவிடப்பட்டன.
ரோடு போடும் பணிகளை துவங்கினால், பயனாக இருக்கும் என மீண்டும் விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் பணிகள் மீண்டும் துவங்கின.
இப்பணிகள் மெதுவாக நடப்பதால், விபத்துகள் ஏற்படுகிறது. நல்லுார் கைகாட்டியில் இருந்து ஜமீன் ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் பாலம் கட்டும் பணிகள் படுமந்தமாக நடக்கிறது. இதனால், அவ்வழியாக செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
விபத்து நடக்குது பொதுமக்கள் கூறியதாவது:
நான்கு ஆண்டு இழுபறிக்கு பின், மேற்கு புறவழிச்சாலை பணிகள் துவங்கப்பட்டுள்ளது. அதே நேரம் பணிகள் மந்தமாக நடப்பதால் விபத்துகள் நடக்கின்றன. நல்லுார் கைகாட்டி அருகே தோண்டப்பட்ட ரோடு, மண் மேடாக இருப்பதால் சிரமமாக உள்ளது.
மேலும், ஜமீன் ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் பாலம் பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. மக்களின் பிரச்னையை கவனத்தில் கொண்டு ரோட்டை தரமாகவும், வேகமாகவும் முடித்து, பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.