/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முழுமையாக இயங்காததால் ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி; மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்குமா?
/
முழுமையாக இயங்காததால் ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி; மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்குமா?
முழுமையாக இயங்காததால் ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி; மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்குமா?
முழுமையாக இயங்காததால் ஸ்பின்னிங் மில்களுக்கு கடும் நெருக்கடி; மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்குமா?
ADDED : நவ 24, 2024 11:41 PM

அன்னுார்: அன்னுார் தாலுகாவில், 80 ஸ்பின்னிங் மில்களில், 50 மில்கள் மட்டுமே இயங்குகின்றன. 'மத்திய, மாநில அரசுகள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் முழுமையாக இயங்க முடியும்,' என மில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில், அன்னுார் தாலுகாவில் அதிக அளவில் ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. 3,000 ஸ்பின்டில் திறன் முதல், 50,000 ஸ்பின்டில் திறன் வரை உள்ள மில்கள் கரியாம்பாளையம், கணேசபுரம், குன்னத்தூர், பசூர், அ. மேட்டுப்பாளையம், பொங்கலூர் பகுதியில் உள்ளன.
இவை ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்கின்றன. அன்னுார் தாலுகாவில் உள்ள ஜின்னிங் பேக்டரிகளில் பருத்தி அரைக்கப்பட்டு, பஞ்சு, ஸ்பின்னிங் மில்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து பஞ்சு பேல்களும், கொள்முதல் செய்யப்படுகின்றன. அன்னுார் தாலுகாவில் பெரும்பாலும் 40ம் எண் மற்றும் 60ம் எண் நூல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சோமனுார் மற்றும் மகாராஷ்டிராவுக்கு நூல் அனுப்பப்படுகிறது. வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தருவது ஸ்பின்னிங் துறை. எனினும் கடந்த சில மாதங்களாக இந்த தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதுகுறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது :
வங்கியில் கடன் பெற்று, ஸ்பின்னிங் மில் இயக்கி வருகிறோம். ஆனால் பஞ்சுக்கு நிலையான விலை இல்லாதது. பருத்தி பற்றாக்குறை, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, அதிக மின் கட்டணம், இறக்குமதி பஞ்சுக்கு அதிக வரி விதிப்பு, வங்கிக் கடன் வட்டி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த தொழில் நசிந்து வருகிறது. அன்னுார் தாலுகாவில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு தந்து வந்த ஸ்பின்னிங் மில்கள் தற்போது தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
அன்னுார் தாலுகாவில் இயங்கி வந்த 80 மில்களில் தற்போது 50 மில்கள் மட்டுமே இயங்குகின்றன. இந்த ஸ்பின்னிங் மில்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும், வேலை தேடிச் சென்று விட்டனர்.
சில மில்கள் வங்கி கடனுக்காக சீல் வைக்கப்பட்டுள்ளன. பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்த வந்த ஸ்பின்னிங் மில் துறையை மீட்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும்.
ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மின் கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. தொழில் துவங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமாக உள்ளது. பருத்தி தட்டுப்பாடு உள்ளது. நிலையான விலை இல்லை.
பஞ்சு, பருத்தி இறக்குமதிக்கு வரியை குறைக்க வேண்டும். ஏற்றுமதிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதால் மத்திய, மாநில அரசுகள் வட்டி மானியம் வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசுகள் செய்து தர வேண்டும்.
பருத்தி பயிரிடும் விவசாயிகளுக்கு அதிக ஊக்கம் அளித்து பருத்தியில் கூடுதல் விளைச்சல் தரும் ரகங்களை கண்டறிந்து பயிரிட செய்ய வேண்டும். அரசே பருத்தி பஞ்சு கொள்முதல் செய்து, ஆண்டு முழுவதும் நிலையான விலையில் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் விலை சரியாமல் இருக்க நிலையான ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மீண்டும் ஸ்பின்னிங் மில்கள் முழுமையாக இயங்கும். பல லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
இவ்வாறு, ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறினர்.