/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திருடு போன ரூ.31 கோடி முடக்கம்:ஆன்லைனில் தேவை உஷார்
/
திருடு போன ரூ.31 கோடி முடக்கம்:ஆன்லைனில் தேவை உஷார்
திருடு போன ரூ.31 கோடி முடக்கம்:ஆன்லைனில் தேவை உஷார்
திருடு போன ரூ.31 கோடி முடக்கம்:ஆன்லைனில் தேவை உஷார்
ADDED : ஜன 19, 2024 11:20 PM
பெ.நா.பாளையம்:கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக கடந்த ஆண்டில், 3023 புகார்கள் பெறப்பட்டு, ஆன்லைனில் திருட்டுப்போன 31 கோடி ரூபாய் முடக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு, 8 முதல், 10 சைபர் கிரைம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் நன்கு படித்தவர்களே சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை இழக்கின்றனர். வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுடன், வங்கி கணக்குகள் இணைய வழி, வாயிலாக இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மோசடி நபர்கள், வாடிக்கையாளர்களின் மொபைல் அல்லது இ-மெயிலுக்கு லிங்க் அனுப்பி தங்கள் வலையில் விழ வைத்துவிடுகிறார்கள். இது குறித்து, சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது;
வேலை வாங்கி தருவதாக கூறி, 'ஆன்லைன்' வாயிலாக, முன்பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது கூறினால், அதை நம்ப வேண்டாம். இணையத்தில் பகிரப்படும் கவர்ச்சிகரமான, வர்த்தக தள்ளுபடிகளை, நம்பி, ஏமாற வேண்டாம். கோவை மாவட்டத்தில், கடந்த ஆண்டு, 3,023 பண மோசடி புகார்கள் சைபர் கிரைம் போலீசாரால் பெறப்பட்டன. இதில், 39 பண மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், 31 கோடியே ஒரு லட்சத்து, 954 ரூபாய் முடக்கப்பட்டன.
மேலும், சைபர் கிரைம் வழக்கில், ஒரு கோடியே, 64 லட்சத்து, 84 ஆயிரத்து, 216 ரூபாய் மீட்கப்பட்டு, பணத்தை இழந்த நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் முடக்கப்பட்ட ரூ. 31 கோடி, வழக்குகள் முடிந்ததும், சம்பந்தப்பட்டவர்களுக்கு திருப்பி வழங்கப்படும்.
உடனடி புகார்
மோசடியாக பெறப்பட்ட பணம், மோசடி நபரின் வங்கி கணக்கில் இருப்பது உறுதி செய்யப்பட்டதும், உடனடியாக வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குறிப்பிட்ட மோசடி நபரின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு, கோர்ட் உத்தரவின் பேரில் பணம் மீட்கப்பட்டு இழந்த நபர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இணைய வழி, வழியாக பணத்தை இழக்கும் நபர்கள், உடனடியாக,1930 மற்றும் cybercrime.gov.in என்ற முகவரியில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.