ADDED : மார் 31, 2026 11:23 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே விளாமரத்தூரில், பவானி ஆற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு கீழ் பகுதியில், விளாமரத்தூர் உள்ளது. இங்குள்ள பவானி ஆற்றில் நேற்று மேட்டுப்பாளையம் கே.கே., நகர் பகுதியை சேர்ந்த ஐந்து நண்பர்கள் குளிக்கச் சென்றனர். இதில் எதிர்பாராத விதமாக மூன்று பேர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாமல் தத்தளித்தனர். கத்தி கூச்சலிட்டனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் ஓடி வந்து ஒருவரை மீட்டனர். இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஊர் மக்கள் மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு துறையினர் வந்து, உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஒருவரது உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், ஆற்றில் மூழ்கி உயரிழந்தவர்கள் மேட்டுப்பாளையம் கே.கே., நகரை சேர்ந்த கிஷோர், 20, கல்லூரி மாணவர், ஆகாஷ், 17, 12ம் வகுப்பு தேர்வு எழுதி முடித்தவர் என தெரியவந்துள்ளது. இதில் கிஷோரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. ஆகாஷின் உடல் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்றனர்.
---
