ADDED : செப் 18, 2026 04:51 PM
கோவை: பள்ளி மாணவர்களிடம் புத்தாக்க சிந்தனை மற்றும் தொழில்முனைவு திறன்களை வளர்க்கும் வகையில், பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு திட்டத்தில், மாநிலம் முழுவதும் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க சிந்தனைகளை மாணவர்கள் சமர்ப்பித்தனர். பலகட்ட மதிப்பீடுகளுக்குப் பின், 160 அணிகள் மண்டல இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. இதில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பள்ளி அணிகளும் இடம்பெற்றுள்ளன.
தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்கான மண்டலவாரியான இறுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி, மதுரை, திருச்சி மண்டலங்களைத் தொடர்ந்து, கோவை மண்டலத்துக்கான இறுதிப்போட்டி, பாரதியார் பல்கலையில் நடந்தது. இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம் மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் பங்கேற்றன. 200 மாணவர்கள் தங்களது புத்தாக்கத் திட்டங்களை சமர்ப்பித்து, நடுவர்களிடம் விளக்கினர்.
தொடர்ந்து, வேலுார் மற்றும் சென்னை மண்டலங்களுக்கான இறுதிப்போட்டிகள் நடைபெற உள்ளன. அனைத்து மண்டல போட்டிகளிலும் தேர்வு செய்யப்படும் அணிகளில் இருந்து, மாநில அளவில் சிறந்த 60 அணிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
