வெற்றிக்கு தேவை தொடர் முயற்சி! கல்லுாரி விழாவில் பேச்சு
வெற்றிக்கு தேவை தொடர் முயற்சி! கல்லுாரி விழாவில் பேச்சு
ADDED : செப் 01, 2026 06:41 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், 2026 – 27ம் ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மாணவர்களின், ‘துளிர் 2026’ துவக்க விழா நடந்தது.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்கள் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்து பேசுகையில், ‘‘வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு தொடர்ச்சியான முயற்சியும், தோல்விகளை தாண்டி மீண்டும், மீண்டும் முயற்சிக்கும் மனப்பாங்கும் இன்றியமையாதவை. பெற்றோர் வழங்கும் தொடர்ச்சியான ஊக்கம், வழிகாட்டுதல் மாணவர்களின் தன்னம்பிக்கையை வலுப்படுத்தி, இலக்குகளை அடைய உறுதுணையாக அமையும்,’’ என்றார்.
கல்லுாரி தாளாளர் ஹரிஹரசுதன் பேசுகையில், ‘‘கல்வி என்பது மதிப்பெண்களுக்கு மட்டுமல்ல; மாணவர்களின் அறிவு, திறன், ஆளுமை மற்றும் தொழில் திறன்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதே ஆகும். மாணவர்கள் தொடர்பு திறன்கள், மனித உறவுத்திறன்கள், தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்,’’ என்றார்.
தமிழ் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் பேசுகையில், ‘‘மாணவர்கள் விருப்பமான கல்வி மற்றும் தொழில் துறையை தேர்ந்தெடுத்து, முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும். உண்மை, அகிம்சை, நேர்மை போன்ற நற்பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும். சவால்களை தைரியத்துடன் எதிர்கொண்டு தனித்திறன்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும்,’’ என்றார்.
என்.ஐ.ஏ., கல்வி நிறுவனங்களின் முதல்வர் கோவிந்தசாமி, நிர்வாக குழு உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி பேசினார். பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அருட்செல்வர் வித்யா சக்தி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, 1,200 லேப்டாப்கள் வழங்கப்பட்டன. கல்லுாரியின் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு டீன் ராமகிருஷ்ணன், இணை டீன்கள் விஜயகுமார், கண்ணபிரான் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
