மரங்களை மொட்டையாக்க அதிகாரிகள் ஆதரவு! சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
மரங்களை மொட்டையாக்க அதிகாரிகள் ஆதரவு! சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சி
UPDATED : ஜூலை 28, 2026 04:49 AM
ADDED : ஜூலை 27, 2026 08:31 PM

கோவை: குனியமுத்துாரில் கடைக்கு முன்பிருந்த 5 மரங்கள், அனுமதிக்கு மாறாக வெட்டப்பட்டுள்ளன. கடை உரிமையாளர் மற்றும் வி.ஏ.ஓ. மற்றும் ஆர்.ஐ. மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
போத்தனுாரை சேர்ந்த முகமது ரபீக், குனியமுத்துாரில் உள்ள கடைக்கு முன்புள்ள மரங்களை வெட்ட, பேரூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். கடையின் மேற்கூரைக்கு இடையூறாக இருப்பதால், வி.ஏ.ஓ. மற்றும் ஆர்.ஐ. முன்னிலையில் கிளைகளை மட்டும் வெட்ட தாசில்தார் சேகர் அனுமதி அளித்தார்.
அதற்கு மாறாக, அங்குள்ள 4 வேப்ப மரங்கள், 1 வாகை மரத்தில் அனைத்து கிளைகளையும் வெட்டி வீழ்த்தி, மொட்டையாக்கி விட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விரைந்து வந்தனர். மரத்தை வெட்டி வீழ்த்தியவர்கள் ஓடி விட்டனர். வெட்டப்பட்ட மரத்துண்டுகள் ரோட்டோரத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
தாசில்தாரின் உத்தரவில் வி.ஏ.ஓ. ஆர்.ஐ. முன்னிலையில் வெட்ட வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார். இருவரும் இருந்தபோதே மரங்கள் மொட்டையாக்கப்பட்டு இருக்கிறதென்றால், இந்த சட்ட விரோத செயலுக்கு உடந்தையாக இருந்திருக்கின்றனர் என தெரிகிறது.
நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்காமல் பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள மரங்களை வெட்ட, வி.ஏ.ஓ. ஆர்.ஐ. தாசில்தார் ஆகியோர் இணைந்து அனுமதி தந்திருக்கின்றனர்.
இம்மூவரும் 13ம் தேதி நேரில் சென்று புல தணிக்கை செய்ததாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். ஏழை எளிய மக்கள் சான்று கேட்டு விண்ணப்பித்தாலே, இம்மூன்று அதிகாரிகளும் ஒரே நாளில் கையெழுத்திட்டு வழங்கியதில்லை.
மரம் வெட்டுவதற்கு மட்டும் ஒரே நாளில் ஆய்வு செய்ததாக குறிப்பிட்டு, உத்தரவு கொடுத்திருக்கின்றனர். நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த மரங்களை, அனுமதி பெறாமல் வெட்ட உத்தரவிட்டது சட்ட விரோதம்.
அதனால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து, தவறு செய்தோரை சட்ட ரீதியாக தண்டிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட பசுமை குழுவும் இவ்விஷயத்தில் தலையிட்டு, மரத்தை வெட்டி வீழ்த்த இஷ்டத்துக்கு அனுமதி கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
பசுமை குழு அனுமதியின்றி, இனி எந்தவொரு இடத்திலும் மரங்களை வெட்டக் கூடாது. மரம் வெட்டுவோர் மீதும், மரத்துண்டுகளை விலைக்கு வாங்கும் மர அரவை நிறுவனங்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க 'கிரீன் கேர்' அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
