ADDED : நவ 21, 2025 06:50 AM
கோவை: மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், சிறைக்குள் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
கோவை, பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகர் பகுதியில், கடந்த 2ம் தேதி இரவில், கல்லுாரி மாணவி, தனது ஆண் நண்பருடன் காருக்குள் பேசிக்கொண்டிருந்த போது, மொபட்டில் வந்த மூன்று நபர்கள், ஆண் நண்பரை தாக்கி விட்டு, மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து தப்பினர். விசாரணையில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புனரியை சேர்ந்த சதீஸ், 30, இவரது சகோதரர் கார்த்திக், 21, இவர்களது உறவினர் மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த குணா,20, ஆகியோர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தப்பிய மூவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்து கைது செய்தனர்.
கோவை அரசு மருத்துவமனையில் மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களை, பாதிக்கப்பட்ட மாணவி, அடையாளம் காட்டும் வகையில், கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி, கோவை ஜே.எம்:1, மாஜிஸ்திரேட் தமிழினியன் முன்னிலையில் அணிவகுப்பு நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன், வேறு கைதிகள் நிறுத்தப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் ஆண் நண்பர் வரவழைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட நபர்களை அடையாளம் காட்டினர்.
