ADDED : ஏப் 27, 2026 09:10 PM
கோவை:தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் (டாக்ட்) சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், இடையர்பாளையம் பகுதியில் உள்ள அந்த சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து 'டேக்ட்' வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈரான், இஸ்ரேல் போர் தொடர்கிறது. தொழில்துறை பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வார்பட்டறை, 'லேசர் கட்டிங்', 'பேப்ரிகேஷன்' உள்ளிட்ட தொழில்களும், அதை சார்ந்த தொழில் முனைவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தொழிலாளிகள் வேலை இழக்கும் அபாயம், தொழில் கூடங்கள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.1,950 மதிப்பு கொண்ட ஒரு சிலிண்டர், கள்ள சந்தையில் ரூ.7,000 வரை விற்கப்படுகிறது. ஜாப் ஆர்டர் தொழில்கள் முடங்கியிருப்பதால் தடையற்ற சிலிண்டர் விநியோகம் செய்து எங்களை பாதுகாக்க வேண்டும்.
தொழில் முனைவோரின் வங்கி கடன்களுக்கான மாதாந்திர தவணை தொகை ஒரு நாள் தவறினாலும் 'சிபில் ஸ்கோர்' குறைத்து விடுகிறார்கள். குறுந்தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு வங்கிகள் முட்டுக்கட்டை போடுகின்றன.
ஏற்கனவே பண மதிப்பிழப்பு, கொரோனா தொற்று, மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டோம்.
ஒருநாள் தவறினாலும் சிபில் ஸ்கோர் குறைக்கும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி நிறுத்த வேண்டும்.
சட்டசபை தேர்தல் முடிந்து ஆட்சியமைக்கும் புதிய அரசு, கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் முனைவோர்களுக்கான தொழில் பேட்டை உருவாக்கித்தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
