ADDED : ஜூலை 03, 2026 04:48 AM

மருதமலை, ஜூலை 3--
அறநிலைய துறை நிர்வகிக்கும் பல கோயில்களில், பிரசாத கடைகளை தனியார் ஏலம் எடுத்து நடத்தி வந்தனர். அதிக விலை, சுகாதார குறைவு, ஊழியர் அலட்சியம் என பல புகார்கள் வந்ததால், இனி அந்தந்த கோயில் நிர்வாகமே, பிரசாத கடையை நடத்துமாறு த.வெ.க. அரசு உத்தரவிட்டது.
அதன்படி, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று பிரசாத கடையை தக்கார் ஜெயகுமார் திறந்து வைத்தார். கோயில் துணை கமிஷனர் விமலா கலந்து கொண்டார். புளியோதரை 150 கிராம் - 20 ரூபாய்க்கும், லட்டு 50 கிராம் - 20 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில், பிரசாத கடையை உதவி கமிஷனர் சத்யவதி திறந்து வைத்தார். இங்கு, புளியோதரை 100 கிராம் - 15 ரூபாய்க்கும், லட்டு 50 கிராம் - 20 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
தற்போது, அந்தந்த கோயில் நிர்வாகமே விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கிறோம். அனைத்து கோயில்களுக்கும் பிரசாத பட்டியல் மற்றும் விலை நிர்ணயித்து அரசு உத்தரவு வந்த பின், எல்லா இடங்களிலும் ஒரே நடைமுறை பின்பற்றப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
