/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் தற்காலிக கடைகள் பயணியர் தவிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் தற்காலிக கடைகள் பயணியர் தவிப்பு
ADDED : ஆக 14, 2025 09:21 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், வார விடுமுறை நாட்களில், அத்துமீறி தற்காலிக கடைகளை அமைப்பதால், நெரிசல் ஏற்பட்டு பயணியர் பாதிக்கின்றனர்.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கிராமப்புறங்களுக்கு மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் பஸ் இயக்கப்படுகின்றன.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாகன நெரிசல் காரணமாக, பஸ் ஸ்டாண்டிற்கு மாற்றாக, சி.டி.சி. மேடு பகுதியில், 8 கோடி ரூபாய் மதிப்பில் புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பழைய பஸ் ஸ்டாண்டில் எந்தவொரு கட்டமைப்பும் மேம்படுத்தப்படாமல் உள்ளது. நகராட்சி கட்டடங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருவதால், பலர், கடைகளை காலி செய்து விட்டனர்.
பழநி பஸ்கள் வெளியேறும் பகுதியும் மூடப்பட்டதால், அங்கு நெருக்கடியான சூழல் நிலவுகிறது. பஸ்கள் நுழைவுவாயில் வழியே வெளியே இயக்க முற்படுவதால் நெரிசல் அதிகரிக்கிறது.
இந்நிலையில், வார விடுமுறை நாட்களில், சிலர், பஸ் ஸ்டாண்டினுள் தற்காலிக கடைகளை அமைக்கின்றனர். அங்கு, பைக், காரில் வருவோர், தங்களது வாகனங்களை நிறுத்த முற்படுவதால் கூடுதலாக நெரிசல் ஏற்படுகிறது.
பயணியர் கூறியதாவது:
புறநகர் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் என்ற பெயரில், பழைய பஸ் ஸ்டாண்டில் இரு ஆண்டுகளாக எந்தவொரு கட்டமைப்பும் மேம்படுத்தவில்லை. மழை, வெயில் என, பல்வேறு சிரமத்திற்கு இடையே, இன்றும் மக்கள் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, பஸ் ஸ்டாண்டில், அத்துமீறி அமைக்கப்படும் தற்காலிக கடைகளால் கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறு, கூறினர்.