/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
/
இளநீர் பண்ணை விலை ஒரு ரூபாய் உயர்வு
ADDED : ஜன 15, 2024 12:17 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையை விட ஒரு ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை விலகி விட்டதால், தமிழகத்தில் இனி தொடர்ந்து வறண்ட வானிலை நிலவும் என, வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
கடந்த, இரண்டு மாதங்களாக இளநீர் வரத்து மிகவும் அதிகரித்து இருந்தாலும், நோய், பூச்சி தாக்குதல் காரணமாக பல இடங்களில் தரம் குறைந்து காணப்பட்டன.
தற்போது, தொடர் மழை மற்றும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக ஈரியோ பைட் தாக்குதல் பெருமளவு குறைந்து புதிய குரும்பைகள் நல்ல தரத்துடன் உள்ளன.
எனவே இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையை விட, ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டு, 19 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 7,250 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வரக்கூடிய மாதங்களில் இளநீர் வரத்து குறைய வாய்ப்புள்ளது. எனவே, இளநீரின் விலை இனி தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.