/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரை டூவீலர் ஸ்டாண்டானது! ஆய்வு செய்த நகராட்சி கமிஷனர் கடும் எச்சரிக்கை
/
பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரை டூவீலர் ஸ்டாண்டானது! ஆய்வு செய்த நகராட்சி கமிஷனர் கடும் எச்சரிக்கை
பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரை டூவீலர் ஸ்டாண்டானது! ஆய்வு செய்த நகராட்சி கமிஷனர் கடும் எச்சரிக்கை
பஸ் ஸ்டாண்ட் நிழற்கூரை டூவீலர் ஸ்டாண்டானது! ஆய்வு செய்த நகராட்சி கமிஷனர் கடும் எச்சரிக்கை
ADDED : மே 23, 2025 06:57 AM

பொள்ளாச்சி: ''பொள்ளாச்சி நகராட்சி பஸ் ஸ்டாண்டில், பயணியர் நிற்கும் பகுதியில் வாகனங்களை நிறுத்த கூடாது; நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும்,'' என, நகராட்சி கமிஷனர் கணேசன் எச்சரிக்கை விடுத்தார்.
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், நெகமம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் கிராமப்புற பஸ்களும் வந்து செல்கின்றன.
அதில், கோவை பஸ் நிறுத்தப்பகுதி அருகே பஸ்சுக்காக காத்திருக்கும் பயணியர் அமர்வதற்காக இருக்கை வசதியுடன் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
பயணியர் அமரும் இடம், டூவீலர் ஸ்டாண்டாக மாறி வருகிறது. அரசுத்துறை அதிகாரிகள், போலீசார் என பலரும், வாகனங்களை பஸ் ஸ்டாண்டில் பயணியர் அமரும் நிழற்கூரை பகுதியை ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்
இவர்களை பார்த்த சில பொதுமக்களும், தங்களது வாகனங்களை அங்கே நிறுத்திச் செல்வது வாடிக்கையாகி உள்ளது. கட்டணமில்லா டூவீலர் ஸ்டாண்ட் போல மாறியதால் பயணியர் அமர முடியாமல் நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், முதியோர், வாகனங்களை கடந்து இருக்கையில் அமர்வது இயலாத காரியமாக மாறியது. இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில், நகராட்சி கமிஷனர் கணேசன், காலை நேரத்தில், நகரப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு சென்ற அவர், பயணியருக்காக அமைக்கப்பட்டு வரும் புதிய நிழற்கூரையை ஆய்வு செய்தார்.
பஸ் ஸ்டாண்டில் கோவை பஸ் நிறுத்தப்பகுதி அருகே உள்ள பயணியர் நிழற்கூரையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.அதிகளவு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால், பயணியர் அமரவும், உள்ளே செல்லவும் சிரமப்பட்டனர்.
அதிகாரிகளை அழைத்து இனி இங்கு யாரும் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயணியர் வசதிக்காக கட்டப்பட்ட பகுதியில் வாகனங்கள் நிறுத்தம் செய்வதை அனுமதிக்கூடாது, என எச்சரித்தார்.
நகராட்சி கமிஷனர் கூறுகையில், ''பயணியர் வசதிக்காக கட்டப்பட்ட நிழற்கூரைப்பகுதி டூவீலர் ஸ்டாண்டாக மாற்றி வருவது தவறான செயலாகும். இங்கு யாரும் வாகனங்களை நிறுத்த கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறியும், எச்சரிக்கையை மீறியும் வாகனங்கள் நிறுத்தம் செய்வது கண்டறியப்பட்டால், அபராதம் விதிப்பு, வாகனங்கள் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைக்கப்படும். இனி இதுபோன்று செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.