ADDED : ஜன 30, 2026 05:24 AM

அன்னூர்: அன்னூரில் வரும் 1ம் தேதி தங்க தேரோட்டம் நடைபெறுகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தங்கத்தேர் செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த ஸ்தபதி பூபதி தலைமையிலான கலைஞர்கள் ஏற்கனவே மன்னீஸ்வரர் கோவிலில் உட்பிரகாரத்தில் உலா வந்து கொண்டிருந்த மரத்தினால் ஆன தேரில் காப்பர் தகடுகள் பதித்து அதற்கு தங்க மூலம் பூசி உள்ளனர். சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் இதற்கு செலவாகியுள்ளது.
இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் மற்றும் அறங்காவலர்கள் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் ஆறாவதாக இங்கு தங்க தேர் செய்யப்பட்டுள்ளது. வருகிற 1ம் தேதி மாலை 6:45 மணிக்கு தங்க தேரோட்டம் நடைபெறுகிறது.
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்,' என்றனர். ஏற்பாடுகளை, அறங்காவலர்கள், திருமுருகன் வழிபாட்டு அறக்கட்டளையினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
தேரில் முன்புறம் இரண்டு குதிரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மா, கந்தர்வர்கள், மயில் ஆகியதும் தேரில் அமைக்கப்பட்டுள்ளன.

