/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுத்த கோலங்கள் வாசகியர், குட்டீஸ் சிந்தனை 'வேற லெவல்'
/
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுத்த கோலங்கள் வாசகியர், குட்டீஸ் சிந்தனை 'வேற லெவல்'
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுத்த கோலங்கள் வாசகியர், குட்டீஸ் சிந்தனை 'வேற லெவல்'
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுத்த கோலங்கள் வாசகியர், குட்டீஸ் சிந்தனை 'வேற லெவல்'
UPDATED : ஜன 12, 2026 05:49 AM
ADDED : ஜன 12, 2026 05:48 AM

கோவை: கோவையில் 'தினமலர்' நாளிதழின் 'மார்கழி விழாக்கோலம்' போட்டி, அபார்ட்மென்ட்களில் வசிக்கும் நம் வாசகியருக்காக நடத்தப்பட்டது. இவர்களுடன் குட்டீசும் அதிகளவில் பங்கேற்றனர். நஞ்சுண்டாபுரம் ஆர்.ஆர்.துரியா அபார்ட்மென்டில் நடந்த கோலப் போட்டியில், 'நல்வரவு' என்ற வாசகத்துடன் வரவேற்றது கோலம்.
வித்தியாசமான கருத்துகளுடன் அமைக்கப்பட்டிருந்த கோலங்கள் வியக்க வைத்தன. நடுவர் புவனேஸ்வரி கோலங்களை தேர்வு செய்தார். புள்ளி கோலங்கள் பிரிவில் ராதிகா, வினிதா, ஜெயராணி, ரங்கோலி பிரிவில், மாலினி, ஸ்ரீநிதி, நிகாரிகா, அத்தப்பூ கோலம் பிரிவில் நிர்மலா, ஷில்பா, சுகிர்தா ஆகியோர் முதல் மூன்று இடங்கள் பிடித்தனர்.
ஆறுதல் பரிசுக்கு சுவாதி, சண்முக ஆனந்தி, தீக்ஷா, சவுபர்ணிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும், அபார்ட்மென்ட் தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் கார்த்திக், செயலாளர் நவநீதன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
சில மாதங்களில் தமிழக சட்டபை தேர்தல் நடக்கக் கூடிய நிலையில், இதை மையமாக வைத்து கோலம் வரைந்த அபூர்வா கூறுகையில், ''தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கோலம் வரைந்திருந்தேன். யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்பதிவு செய்யலாம். ஆனால், ஓட்டுப்பதிவு செய்வது அவசியம். குடிமகனின் முக்கிய கடமைகளில் ஒன்று ஓட்டுப்பதிவு,'' என்றார்.
பிராவிடன்ட் கிரீன்பார்க் அபார்ட்மென்ட் செல்வபுரம் பிராவிடன்ட் கிரீன்பார்க் அபார்ட்மென்டில் நடந்த போட்டியில், வாசகியர் அத்தப்பூ கோலம் முதல் கான்டெம்பரரி ஆர்ட் வரை பல ரகங்களில் கோலமிட்டு திக்குமுக்காட செய்தனர்.
குறிப்பாக, 'உழவே உயர்வு' என்ற கருப்பொருளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் கோலங்கள், 'செல்போன் மோகத்தை தவிர்த்து புத்தக வாசிப்பை பழகுங்கள்' என்ற சமூக விழிப்புணர்வு கோலங்கள் கவர்ந்தன.
அத்தப்பூ கோலப் பிரிவில் பரிசு பெற்ற ரம்யா கூறுகையில், ''இப்போட்டிகள் இல்லத்தரசிகளுக்கு மிகுந்த உற்சாகத்தை தருகின்றன. போட்டிக்கும் அப்பாற்பட்டு, மறைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர இது ஒரு நல்வாய்ப்பு,'' என்றார்.
புள்ளிக்கோலப் பிரிவில் வென்ற சுமதி கூறுகையில், ''தற்போது புள்ளிக்கோலம் போடும் பழக்கம் கணிசமாகக் குறைந்து வருகிறது. இத்தகைய போட்டிகள் இளம் தலைமுறையினரிடையே மீண்டும் ஆர்வத்தை உருவாக்கும்,'' என்றார்.
பரிசு பெற்றவர்கள் அத்தப்பூ கோலம் முதலிடம்: ரம்யா, இரண்டாமிடம்: ஆர்யா ராஜ். புள்ளிக்கோலம்: முதலிடம் சுமதி. சரஸ்வதி ஆறுதல் பரிசு பெற்றார்.
ஆர்ட் பிரிவில் முதலிடம்: சுஜிதா. இரண்டாமிடம்: தர்ஷினி பிரியா. மூன்றாமிடம்: ஸ்ரீஜா மனோரஞ்சன். சாந்தா, சினேகா, ரேவதி, அபிலாஷினி, கீர்த்தி ஆகியோர் ஆறுதல் பரிசுகள் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு அபார்ட்மென்ட் தலைவர் ஹேமலதா, துணைத்தலைவர் கோபிநாத் மற்றும் செயலாளர் மனோரஞ்சன் உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.
கோலப் போட்டிகளை, 'தினமலர்' நாளிதழுடன், போத்தீஸ், கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி, ஓட்டல் ஆனந்தாஸ் மற்றும் யாழி நிறுவனத்தினர் இணைந்து நடத்தினர்.

