/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியக்க வைக்கிறது இந்தியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு! அமெரிக்க துணை துாதர் நமது நாளிதழுக்கு சிறப்பு பேட்டி
/
வியக்க வைக்கிறது இந்தியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு! அமெரிக்க துணை துாதர் நமது நாளிதழுக்கு சிறப்பு பேட்டி
வியக்க வைக்கிறது இந்தியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு! அமெரிக்க துணை துாதர் நமது நாளிதழுக்கு சிறப்பு பேட்டி
வியக்க வைக்கிறது இந்தியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு! அமெரிக்க துணை துாதர் நமது நாளிதழுக்கு சிறப்பு பேட்டி
ADDED : பிப் 20, 2024 05:37 AM

''அமெரிக்க அரசியல் மற்றும் பிற துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. இந்தியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு வியக்க வைக்கிறது,'' என, சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதர் கிறிஸ்டோபர் ஹோட்ஜஸ் தெரிவித்தார்.
கோவையில் நடந்த அமெரிக்க கல்வி நிறுவனங்களின் கண்காட்சியில் பங்கேற்க வந்திருந்த இவர், நமது நாளிதழுக்கு நேற்று அளித்த பிரத்யேக பேட்டி:
இந்திய மாணவர்கள் உலகளவில் சிறந்தவர்கள். அமெரிக்க பல்கலைகள், சர்வதேச அளவில் சிறந்து விளங்குகின்றன. இந்த தொடர்பு தான், அமெரிக்காவில் அதிகளவு இந்திய மாணவர்கள் கல்வி கற்க காரணமாக உள்ளது. அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்ற, 4 ஆயிரத்துக்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தரம், பன்முகத்தன்மை போன்ற காரணங்களால் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, 35 சதவீதம் அதிகரித்திருப்பது இரு நாடுகளுக்கு இடையிலான சிறந்த நல்லுறவை காட்டுகிறது. அமெரிக்க கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வி அறிவுடன், பல்வேறு சவாலான பிரச்னைகளுக்கு தீர்வுகாண மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்தியா முழுவதுமுள்ள கல்வி நிறுவனங்கள், குறிப்பாக, தென்னிந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொண்டுள்ளன. கல்வி மட்டுமல்லாமல் மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இந்திய மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறை மற்றும் கல்லுாரியை கவனமாக ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும்.
அமெரிக்க கல்வி நிறுவனங்கள், இந்தியா உட்பட சர்வதேச மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்க உறுதி பூண்டுள்ளன. இந்திய மாணவர்கள் உயிரிழப்பு துரதிர்ஷ்டவசமானது. இதைத்தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம்.
எல்லைகள் இல்லாத விண்வெளி!
பொதுவாக விண்வெளி மற்றும் அதுதொடர்பான ஆராய்ச்சிகள், ஒரு தேசத்தை தாண்டி மனிதர்கள் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை கொடுக்கிறது. சந்திரயான்-3 வெற்றி பெற்றது, கண்டங்களை கடந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. விண்வெளியை பொறுத்தவரை நாம் அனைவரும் பூமியை சேர்ந்தவர்கள்; அவ்வளவு தான்.
நாடு, எல்லைகள் எல்லாம் கிடையாது. இதனால் இரு நாடுகளும் இணைந்து கூட்டாக உருவாக்கியுள்ள நிசார் (NISAR) செயற்கைகோள் ஏவுதலை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். இதேபோன்று பல்வேறு விண்வெளி திட்டப்பணிகள், பயிற்சிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்த பிரபஞ்சம் ஆராய்ச்சிக்கானது; இதில்அனைவரும் பங்கேற்க வேண்டும். இந்தியா-அமெரிக்கா மக்களிடையே பரஸ்பர மரியாதை உள்ளது.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் வளர்ச்சி, கல்வி, வணிகம், தொழிற்துறை என, பல வகைகளிலும் அமெரிக்காவில் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன. அனைத்து நிலைகளிலும், இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ளன. இதற்கு தற்போதுள்ள அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் உள்ள இந்திய வம்சாவளிகளே சாட்சிகளாக உள்ளனர்.
வியக்க வைக்கும் இந்தியர்கள்
அமெரிக்க அரசியல் மற்றும் பிற துறைகளில், இந்தியர்களின் பங்களிப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. உலகளாவிய வளர்ச்சி மற்றும் புதுமைகளை படைப்பதில் இந்தியர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. முக்கிய அமெரிக்க தலைமை பொறுப்புகளில் இந்தியர்களே உள்ளனர். குறிப்பாக தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள், தலைமை பதவிகளை அலங்கரித்து வருகின்றனர். இந்தியர்களின் அர்ப்பணிப்பு உணர்வு வியக்க வைக்கிறது.
இந்தியா-அமெரிக்கா உறவு மற்றும் பரிணாம வளர்ச்சியால், இரு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் பிற பிராந்தியங்களுக்கும், உலகுக்கும் நன்மை கிடைப்பதை காண முடிகிறது. பொருளாதாரம், கல்வி, வணிக உறவுகளை வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.
செயற்கை நுண்ணறிவு, வணிக விண்வெளி கண்டுபிடிப்புகள் போன்றவை இரு நாடுகளின் ஒத்துழைப்பால் வெளியாகி வருகின்றன. இதன் வாயிலாக, உலக வெப்பமயமாக்கல் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். கடந்த 2022ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இணைந்து செயல்படுத்திய முதலீட்டு ஒப்பந்தத்தின் வாயிலாக, இரு நாடுகளுக்கு இடையிலான முதலீடு, நிலையான வளர்ச்சியை எட்டும் என, நம்புகிறோம்.
சக்தி வாய்ந்த 'குவாட்' அமைப்பு
இந்தோ-பசிபிக் பிராந்திய அமைதிக்கு வித்திடும் அமைப்பாக 'குவாட்' உருவெடுத்துள்ளது. உலக அரங்கில் 'குவாட்' அமைப்பு முக்கிய இடத்தை பிடித்துள்ளது; சக்தி வாய்ந்த, அதிகாரம் மிக்கதாக மாறியுள்ளது. அப்பகுதியில் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்கிறது.
மோடி தலைமையிலான இந்தியா மற்றும் அமெரிக்கா உறவு வலுவாக உள்ளது. இந்தியா மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களால் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இரு நாட்டு தலைவர்கள் இடையிலான சந்திப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கான புதிய ஒப்பந்தங்கள் இரு நாட்டு உறவை பலப்படுத்துகின்றன.
இந்திய பொருளாதார வளர்ச்சி ஆற்றல் மிக்கதாக, நம்ப முடியாத அளவில் உள்ளது. மருத்துவம், காலநிலை, கல்வி மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் கடந்த காலங்களில் பல வணிக வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக இந்தியாவின் உலகளாவிய பொருளாதாரம் அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றின்போது, அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது. அதேநேரம், அமெரிக்கா பொருளாதாரத்தை வலுவாக பராமரித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறோம். வலுவான பொருளாதார அடித்தளத்தால், பெருந்தொற்று நேரத்தில் தற்காத்து கொள்ள முடிந்தது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் திறமைகளையும் போற்றும் வாய்ப்பு பெற்றுள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

