/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடிகால் அமைப்பு சுத்தமாக இல்லை மழை நீரால் நிறைகிறது சாலை
/
வடிகால் அமைப்பு சுத்தமாக இல்லை மழை நீரால் நிறைகிறது சாலை
வடிகால் அமைப்பு சுத்தமாக இல்லை மழை நீரால் நிறைகிறது சாலை
வடிகால் அமைப்பு சுத்தமாக இல்லை மழை நீரால் நிறைகிறது சாலை
ADDED : அக் 13, 2025 01:16 AM

கோ வை மாநகராட்சி மத்திய மண்டலம், 80வது வார்டில் கெம்பட்டி காலனி, சுப்பையா லே-அவுட், அசோக் நகர், சாவித்திரி நகர், குறிஞ்சி நகர், எல்.ஜி. தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அதிக தெருக்களுடன், அடர்த்தியான வார்டாக இது உள்ளது.
உக்கடம் பெரியகுளத்தை ஒட்டி இப்பகுதிகள் இருப்பதால் காலை, மாலை, விடுமுறை நாட்களில் எப்பொழுதும் பரபரப்பாகவே இருக்கும். வடிகால் அமைப்பு போதியளவில் இல்லாததால் உப்புமண்டி உள்ளிட்ட இடங்களில் மழைக் காலங்களில், குடியிருப்புக்குள் தண்ணீர் புகுவதை பிரதான பிரச்னையாக, மக்கள் முன்வைக்கின்றனர்.
பராமரிக்காததால் பாம்பு கெம்பட்டி காலனி, கீரைத்தோட்டம் பகுதிகளில் தனியார் இடங்கள் அதிகம் உள்ளன. அவற்றை பராமரிக்காமல் இட உரிமையாளர்கள் அலட்சியமாக இருக்கின்றனர். தகவல் அளித்தாலும் வருவதில்லை. கீரைத்தோட்டம் பகுதியில் வீடுகள் முன்பு பாம்புகளை சாதாரணமாக பார்க்க முடியும். குழந்தைகளை வெளியே விளையாட விடுவதற்கு பயமாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும். - பாபு பொற்கொல்லர்
சாக்கடை வசதி தேவை நான், 15 ஆண்டுகளுக்கும் மேலாக கீரைத்தோட்டம் பகுதியில் வசிக்கிறேன். மண் ரோடாக இருந்து தற்போதுதான் தார் ரோடு வசதி கிடைத்துள்ளது. இருப்பினும், சாக்கடை வசதி இதுவரை ஏற்படுத்தப்படாததால், மழை காலங்களில் குளம் போல் இப்பகுதி மாறிவிடுகிறது. மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு, சாக்கடை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். -சங்கர் சுயதொழில்
சிமென்ட் ரோடு தேவை கெம்பட்டிகாலனி அடுத்த எஸ்.எஸ்.காலனி பகுதியில், ஓட்டு வீடுகள் அதிகம் உள்ளன. இங்குள்ள தெருக்கள் மண் ரோடாக இருப்பதால், மழை காலத்தில் வழுக்கி விழுகிறோம். இரவில் வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே, சிமென்ட் ரோடு அமைத்துத்தர வேண்டும். உப்புமண்டி பகுதியில், மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், பெரும் சிரமங்களை சந்திக்கிறோம். - குப்பம்மாள் சுயதொழில்
கழிவுநீர் 'ரிவர்ஸ்' செல்வபுரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி எதிரே அசோக் நகர், சுப்பையா லே-அவுட், கோவிந்தசாமி அவென்யூ, பாலாஜி அவென்யூ பகுதிகளில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடையில்(யு.ஜி.டி.,) அடைப்பு ஏற்பட்டு, அடிக்கடி வீடுகளுக்குள் கழிவுநீர் 'ரிவர்ஸ்' எடுக்கிறது. துர்நாற்ற பிரச்னையால் வீட்டுக்குள் வசிக்க முடியவில்லை. யு.ஜி.டி., குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய வேண்டும். - -சங்கர் மருந்தாளுனர்
குளமாக மாறுகிறது செல்வசிந்தாமணி குளத்தில் இருந்து, உக்கடம் பெரியகுளத்துக்கு செல்லும் கால்வாயில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்படுகிறது. மழை காலங்களில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுகிறது. அருகே வசிப்பவர்கள்தான், இந்த வேலையை செய்கின்றனர். அவர்களுக்குத்தான் பாதிப்பு என்பதை எப்போது உணரப்போகிறார்களோ தெரியவில்லை. - ஜமேஷா ஆட்டோ டிரைவர்
மழைநீர் வடிகால் எல்.ஜி.தோட்டம், கீரைத்தோட்டம் பகுதிகளில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. பட்டைக்கார அய்யாசாமி கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் குடிநீர் திட்டத்துக்காக ரோடு தோண்டப்பட்டது. சில இடங்களில் 'வெட் மிக்ஸ்' போடப்பட்டுள்ளது. சில இடங்களில் இல்லை. வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். -சாந்தி இல்லத்தரசி