/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வரகளியாறில் இருந்த யானை முண்டந்துறைக்கு பயணம்
/
வரகளியாறில் இருந்த யானை முண்டந்துறைக்கு பயணம்
ADDED : ஜன 24, 2025 10:24 PM

பொள்ளாச்சி, ;கூடலுாரில் பிடிக்கப்பட்டு, டாப்சிலிப் வரகளியாறில் பராமரிக்கப்பட்ட 'புல்லட் ராஜா' என்ற யானை, களக்காடு முண்டந்துறை பகுதியில் விடப்பட்டது.
கூடலுார் வனக்கோட்டத்தில், வீடுகளை சேதப்படுத்தி வந்த 'புல்லட் ராஜா' என்ற ஆண் யானை, கடந்த டிச., மாதம், 28ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம், வரகளியாறு கராலில் வைக்கப்பட்டது. தற்போது அந்த யானை, களக்காடு முண்டந்துறை முத்துக்குழி வயலில் விடப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவதேஜா கூறியதாவது:
கூடலுாரில் பிடிக்கப்பட்டு, வரகளியாறு பகுதியில் கராலில் அடைத்து பராமரிக்கப்பட்ட 'புல்லட் ராஜா' யானைக்கு, தேவையான இலை, தழைகள் கொடுக்கப்பட்டன.
கால்நடை மருத்துவ குழுவும், யானையை கண்காணித்து வந்தது. யானைக்கு எந்த பயிற்சியும் அளிக்கவில்லை. கடந்த, 25 நாட்களுக்கு பின், தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவின் பேரில், நேற்று இந்த யானை, கும்கி யானைகள் உதவியுடன் வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் முத்துக்குழி வயல் பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.
ஏற்கனவே, 'அரி கொம்பன்' யானை தேனி பகுதியில் பிடிக்கப்பட்டு, முத்துக்குளி வயலில் விடப்பட்டது. தற்போது, அங்குள்ள யானை கூட்டத்துடன் சேர்ந்து உலா வருகிறது. காட்டை விட்டு வெளியே வருவதில்லை. அதேபோன்று, இந்த யானையும் அங்கு விடப்பட்டுள்ளது.
இவ்வாறு, கூறினார்.

