/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதை மையமாக மாறி வரும் நகராட்சி பூங்கா! 3 ஆண்டாக பராமரிப்பு இல்லை மக்கள், மாணவர்கள் பாதிப்பு
/
போதை மையமாக மாறி வரும் நகராட்சி பூங்கா! 3 ஆண்டாக பராமரிப்பு இல்லை மக்கள், மாணவர்கள் பாதிப்பு
போதை மையமாக மாறி வரும் நகராட்சி பூங்கா! 3 ஆண்டாக பராமரிப்பு இல்லை மக்கள், மாணவர்கள் பாதிப்பு
போதை மையமாக மாறி வரும் நகராட்சி பூங்கா! 3 ஆண்டாக பராமரிப்பு இல்லை மக்கள், மாணவர்கள் பாதிப்பு
ADDED : ஜன 18, 2024 12:20 AM

உடுமலை : உடுமலை நகராட்சி அண்ணா பூங்கா பராமரிப்பு பணி, பல ஆண்டாக இழுபறியாகி வருவதால், மது அருந்தும் மையமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.
உடுமலை நகராட்சியில், முதல் பொழுது போக்கு அம்சமாக, நுாறு ஆண்டுகளுக்கு முன், பெரிய அளவில் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்ட 'ரேடியோ ரூம்', நுால்கள் படிக்க 'ரீடிங் ரூம்' என பல்வேறு அம்சங்களுடன் காணப்பட்டது.
அரசு கட்டடங்கள், ஆக்கிரமிப்பு காரணமாக, குறுகிய பூங்காவுக்கு, அண்ணா பூங்கா என பெயரிடப்பட்டுள்ளது. பூங்காவை சுற்றிலும், நகராட்சி பள்ளி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை என மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக உள்ளது. பசுமை சூழ்ந்து காணப்பட்ட பெரிய அளவிலான மரங்கள், நடை பாதை, நீரூற்று, அழகான இருக்கைகள், சிறுவர்களுக்கு என விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய பூங்கா என அமைந்திருந்தது.
உடுமலை மக்களுக்கு ஒரே பொழுது போக்கு அம்சமாக இருந்த நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாமல் காணப்பட்டது.
ஆட்சிகள் மாறும் போதும், நகர மன்றம் நிர்வாகத்தின் போதும், கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து, பூங்கா புதுப்பிக்கப்படுவதும், தொடர்ந்து பராமரிக்காமல் வீணாவதும் தொடர் கதையாக உள்ளது.
இது வரை பல கோடி ரூபாய் செலவில் புதுப்பித்தும், மக்களுக்கு பயனில்லாத நிலையை தொடர்கிறது.
இந்நிலையில், மூன்று ஆண்டுக்கு முன், நகராட்சி நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ், ரூ. 1.42 கோடி செலவில், பூங்காவை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே இருந்த பெரும்பாலான கட்டமைப்புகள் உடைக்கப்பட்டும், மரங்கள் வெட்டப்பட்டும் பல்வேறு புதுப்பிக்கும் பணிகள் நடந்தன.
தொடர்ந்து இப்பணிகள் நடக்காமல், பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பின்றியும் திறந்தே கிடப்பதால், பூங்கா அலங்கோலமாகியுள்ளது.
பூங்கா முழுவதும் புதர் மண்டி காணப்படுவதோடு, சமூக விரோத செயல்கள் நடக்கும் மையமாகவும், கஞ்சா, போதை ஊசி ஆசாமிகளின் புகலிடமாக மாறியுள்ளது.
மேலும், அருகிலுள்ள டாஸ்மாக் கடையிலிருந்து, மது பானங்கள் வாங்கி வரும், 'குடி' மகன்கள் பூங்காவில் அமர்ந்து, மது அருந்தும் மையமாகவும் மாற்றியுள்ளனர்.
இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பாதித்து வருகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் பூங்கா புதுப்பிக்கும் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்.
முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில், பூங்கா பராமரிப்பாளர், பாதுகாவலர் ஆகியோரை நியமித்து, முறையாக பராமரிக்க வேண்டும்.