/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஒளி' தரும் மருதாசலத்தின் மன நிறைவு
/
'ஒளி' தரும் மருதாசலத்தின் மன நிறைவு
ADDED : செப் 07, 2025 02:38 AM

பெ ருகி வரும் முதியோர் இல்லங்களையும், ரோட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் ஆதரவற்றோரையும் பார்க்கும்பொழுது இந்த கலியுகத்தில் 'கல் நெஞ்சங்கள்' அதிகரித்துக் கொண்டே செல்கின்றதோ என்ற எண்ணத்தால், மனவேதனை கூடிக்கொண்டே செல்கிறது.
அதேசமயம், ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்டும் நல் உள்ளங்களை பார்க்கும்பொழுதும் சற்று மனநிம்மதி ஏற்படுகிறது. உதவிக்கரத்தில் சற்று வித்தியாசமாக, ஆதரவற்ற இளம் சிறுவர்கள், முதியோர் இருப்பிடத்துக்குச் சென்று, கட்டணமின்றி சிகை அலங்கார சீர்திருத்த பணி செய்து வருகிறார், சிங்காநல்லுார் எஸ்.என்.ஆர்., லே-அவுட்டை சேர்ந்த மருதாசலமூர்த்தி.
அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டது...
நான் எனது மாமாவிடம் வளர்ந்தேன். என்னை கஷ்டப்பட்டு வளர்த்ததை பார்த்தபோது, வாழ்க்கையை கடந்து வருவதன் வலி உணர்ந்தது. என்னால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய முடிவு செய்தேன். 'குழந்தையும் தெய்வமும் ஒன்று' என்பார்கள்.
ஆதரவற்ற குழந்தைகள், காப்பகங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு வாரந்தோறும் கட்டணமின்றி சிகை அலங்காரம் செய்கிறேன். ஒண்டிப்புதுார், பாப்பம்பட்டி, கருமத்தம்பட்டி உள்ளிட்ட இடங்களில் செயல்படும் காப்பகங்களுக்குச் சென்று, 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சேவை செய்து வருகிறேன்.
தவிர, கருணை இல்லங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு, எங்கள் பகுதியில் வசிப்பவர்கள், எனக்கு தெரிந்தவர்களிடம் துணி, காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள் என கிடைப்பதை வாங்கிச் சென்று வழங்கி வருகிறேன்.
குழந்தைகள் இருந்தும் ஆதரவற்றவர்களாகவும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும் பார்க்கும்பொழுது மன வேதனையின் உச்சமோ வேறு. பகவான் யோகி ராம்சுரத்குமார் அருளால் என்னால் இயன்ற உதவிகளை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறேன்.
இதுவரை, 3,500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு, கண்தானம் வழியாக ஒளி தந்துள்ளேன். 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளேன். குழந்தைகள், பெரியவர்கள் மத்தியில் பணி விடை செய்வதில் மனநிறைவு பெறுகிறேன். ஆதரவற்றோர் இல்லங்களே இருக்கக்கூடாது என்பதே எனது எண்ணம்.
இவ்வாறு, அவர் கூறினார்.