/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயிலும் சதம் அடிக்கும் மழையும் வெளுக்கும்!
/
வெயிலும் சதம் அடிக்கும் மழையும் வெளுக்கும்!
ADDED : மே 17, 2025 05:03 AM
உடுமலை : 'திருப்பூர் மாவட்டத்தில், இந்த வாரம், 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுடும்; அதே நேரம் மழையும் வெளுத்து வாங்கும்' என, வானிலை மையம் கணித்துள்ளது.
தற்போது கோடை காலம் நடந்து வருகிறது. பகல் நேரங்களில் அதிக அளவில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால், மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். இந்த வெப்பத்தை தணிக்கும் வகையில், சில நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,தமிழ்நாடு வேளாண் பல்கலை - இந்திய வானிலைத்துறையின் கோவை காலநிலை ஆராய்ச்சி மையம் சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் வாராந்திர காலநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.
அதன்படி வரும், 18ம் தேதி வரை திருப்பூரில், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.
அதிகபட்ச வெப்பநிலை, 37 முதல், 40 டிகிரி செல்சியஸ் (98.6 முதல், 104 டிகிரி பாரன்ஹீட்), குறைந்தபட்சம், 26 முதல், 29 டிகிரி செல்சியஸ் (78.8 முதல், 84.2 டிகிரி பாரன்ஹீட்) வரை வெயில் நிலவும் என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
காலை நேர காற்றின் ஈரப்பதம், 70 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம், 30 முதல், 50 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புண்டு. சராசரியாக, காற்று மணிக்கு, 16 முதல், 22 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
விவசாயிகள் கவனத்துக்கு
இந்த வாரம் இடி, மின்னல் மற்றும் சுழல் காற்றுடன் மழை எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஐந்து மாதங்களுக்கு மேல் உள்ள, வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.
பயிர்களில், பயிர்க்கழிவு மூடாக்கு இடுவதால் மழையால் கிடைத்த மண் ஈரம், ஆவியாகாமல் பார்த்துக் கொள்ள முடியும். மானாவாரி நிலங்களில் பெறப்பட்ட மண்ணை பயன்படுத்தி, கோடை உழவு செய்யலாம்.
பகல் நேரங்களில், வெப்பநிலை உயர்ந்து வருவதால், ஆடு, மாடுகளின் பால் உற்பத்தி மற்றும் உடல் எடை குறையாமல் இருக்க, அடர்தீவனம் மற்றும் பசுந்தீவனம் போதுமான அளவு வழங்க வேண்டும்.
இந்த முறைகளை விவசாயிகள் தவறாது பின்பற்றி பயன்பெறலாம்.