/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமுகை லிங்காபுரத்தில் வனவிலங்குகள் அட்டகாசம்
/
சிறுமுகை லிங்காபுரத்தில் வனவிலங்குகள் அட்டகாசம்
ADDED : அக் 17, 2024 11:29 PM
மேட்டுப்பாளையம்: சிறுமுகை லிங்காபுரம் பகுதியில் ஒரே நாளில், முதியவரை காட்டுப்பன்றி தாக்கிய சம்பவமும், ஆட்டை சிறுத்தை கவ்வி சென்ற சம்பவமும் நடந்ததால், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி, வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அவ்வப்போது காட்டுப்பன்றி, யானை, மான், காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வீட்டின் முன்பு அமர்ந்திருந்த கிருஷ்ணசாமி, 60, என்ற முதியவரை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி தாக்கியது.
இதில் அவர்களுக்கு நெற்றி, இடது கண் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு உள்ளாகவே நேற்று முன் தினம் இரவு, லிங்காபுரம் மாகாளியம்மன் கோவில் பின்புறம் உள்ள குமார், 55, என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் புகுந்த சிறுத்தை ஒன்று, சுமார் 12 கிலோ எடை உள்ள ஆட்டை வாயில் கவ்வியபடி இழுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், அங்கு விரைந்து சென்று, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.---